“ரீல்ஸ் எல்லாம் வாழ்க்கை இல்லை.. ரியலான வாழ்க்கையில் உதவுவது கல்வி தான்”.. உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்!
சென்னை: இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. ரீல்ஸ் வாழ்க்கை இல்லை, ரியலான வாழ்க்கையில் உதவுவது கல்வி மட்டும் தான் என பள்ளி மாணவ மாணவிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், காரைக்குடி அழகப்பா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த குழந்தைகள் தின நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, மாநிலம் முழுவதும் 5,34,000 மாணவ, மாணவிகளுக்கு ரூ.241 கோடி மதிப்பிலான சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாணவர்கள் மத்தியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "பெண்களுக்கு கல்வியுரிமை மறுக்கப்பட்ட காலத்திலிருந்து, தற்போது அதிகளவில் பெண்கள் பள்ளியில் சேர்ந்து படிப்பது திராவிட இயக்கத்தின் நூறாண்டு போராட்டத்தின் வெற்றி. கல்வி, ஏழ்மையைப் போக்கும் மிகப்பெரிய ஆயுதம். கல்வி, பணம் மட்டுமல்ல, நம்பிக்கையும் ஆற்றலும் அளிக்கும்.
ஒரு குடும்பத்தின் ஏழ்மையை நீக்கக்கூடிய ஒரே சக்தி கல்வி தான். அதனால் தான் தமிழக முதலமைச்சர் கல்வித் துறையில் இந்தியாவிலேயே அதிக நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெரியார், அண்ணா, கருணாநிதி வலியுறுத்தியபடி மாணவர்கள் 'ஏன்? எதற்கு? எப்படி?' என்று தொடர்ந்து கேள்வி எழுப்ப வேண்டும்.
மேலும், மாநிலம் முழுவதும் 22 லட்சம் குழந்தைகளுக்கு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படுகிறது. தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் மூலம் 8 லட்சம் கல்லூரி மாணவர்கள் மாதம் 1,000 ரூபாய் பெறுகின்றனர்.விரைவில் கல்லூரிகளில் இலவச லேப்டாப் திட்டம் மீண்டும் அறிமுகமாகிறது. தொடர்ந்து, 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் யுபிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. ரீல்ஸ் வாழ்க்கை இல்லை. அதில் வருவது பெரும்பாலும் பொய்யான உலகம். ரியலான வாழ்க்கையில் உதவுவது கல்வி தான். மாணவர்கள் சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடாமல் ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும்.
ஆசிரியர்கள் உடற்கல்வி நேரத்தை குறைத்து பிற பாடங்களை நடத்த வேண்டாம். முடிந்தால் கூடுதல் நேரம் வழங்கி மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவ வேண்டும். படிப்பு எவ்வளவு முக்கியமோ, உடல் ஆரோக்கியமும் அதே அளவுக்கு அவசியம். கல்வியில் முன்னேறும் மாணவர்கள் குடும்பத்தையும், தமிழகத்தையும் முன்னேற்றுவார்கள்" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications