பெரிய "கை".. ஆபரேஷன் சக்ஸஸ்.. சென்னையில் உதயநிதியின் "குட்டி ராஜ்ஜியம்".. இவர்தான் துணை மேயரா?
சென்னை: சென்னையில் துணை மேயராக யார் வருவார் என்ற கேள்வி, எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேயர் ரேஸில் பலர் உள்ள நிலையில் துணை மேயர் ரேஸிலில் பலரும் உள்ளனர். திமுக சென்னையை கைப்பற்றினால் இங்கு துணை மேயர் பதவியை தட்டி தூக்க முக்கியமான ஒருவர் முயன்று வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி நடந்து வருகிறது. காலை 10-11 மணி அளவில் முழுமையான முன்னணி நிலவரங்கள், ஒரு கிளியர் பிக்சர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. இதில் பெரும்பாலான வார்டுகளை, கிட்டத்தட்ட 80 சதவிகித வார்டுகளை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதில் ஆளும் திமுக தரப்பு தீவிரமாக இருக்கிறது.

சென்னை -2 அமைச்சர்கள்
சென்னையில் இதற்காக கடந்த 3 மாதமாகவே ஆளும் திமுக தரப்பு தீவிரமாக பணியாற்றி வந்தது. அதிலும் அமைச்சர்கள் சேகர் பாபு, மா சுப்பிரமணியம் இருவரும் சென்னையில் தீவிரமாக களப்பணிகளை செய்து வந்தனர். சென்னையில் திமுகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டதாகவே கூறப்படுகிறது. 180 வார்டுகள் லட்சியம் 150 நிச்சயம் என்ற நம்பிக்கையில் திமுக தலைமை இருப்பதாக அறிவாலய தரப்புகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் சென்னை உட்பட 11 முக்கியமான மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கணிப்புகளை விஞ்சி இந்த முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மேயர்
முக்கியமாக சென்னை, தாம்பரம் மாநகராட்சிகள் பட்டியலின பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னைக்கு இவர்தான் மேயர், அவர்தான் மேயர் என்று கடந்த வருடம் வெளியான கணிப்புகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதிலும் சென்னைக்கு உதயநிதி ஸ்டாலின் மேயராக வருவார் என்றெல்லாம் கணிப்புகள் தெரிவிக்கப்பட்டு, கடைசியில் அது இல்லை என்று ஊர்ஜிதம் ஆனது. சென்னையில் மேயராக பல பெண் தலைவர்கள், ஆண் தலைகளின் மனைவிகள் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார்கள்.

துணை மேயர்
இந்த நிலையில்தான் துணை மேயர் ரேஸிலும் பலர் முட்டி மோதிக்கொண்டு இருக்கிறார்கள். அதில் உதயநிதிக்கு நெருக்கமான சிற்றரசுதான் துணை மேயர் ரேஸில் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தமாக 200 இடங்களில் 164 இடங்களில் சென்னையில் இந்த முறை திமுக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த முறை ஆயிரம் விளக்கு தொகுதியில் சிற்றரசுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. சென்னை மேற்கு திமுகவின் மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் மறைவை அடுத்து இவர் அந்த பொறுப்பிற்கு வந்தார்.

உதயநிதி
சிற்றரசுவிற்கு அப்போது பதவி கிடைக்கவே உதயநிதியின் ஆதரவுதான் முக்கிய காரணம் என்று செய்திகள் வந்தன. இவர் அன்பில் மகேஷ், உதயநிதி இருவருக்கும் மிகவும் நெருக்கம். சென்னையில் திமுகவில் இருக்கும் பவர் ஃபுல் கைகளில் ஒருவர் இப்போது சிற்றரசுதான் என்கிறார்கள் நிர்வாகிகள். முன்னர் உதயநிதியை மேயராக்க வேண்டும் என்று சிற்றரசு கடுமையாக கோரிக்கை விடுத்து வந்தார். இளைஞரணி அமைப்பாளராக சிற்றரசு இருந்த போதே இதற்கான கோரிக்கைகளை வைத்தார்.

கோரிக்கை
2019லேயே சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கோரி திமுக இளைஞரணி அமைப்பாளர் (அப்போதைய பதவி) சிற்றரசு விருப்பமனு தாக்கல் செய்தார். ஆனால் இப்போது இந்த மேயர் போஸ்டிங் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. துணை மேயராக உதயநிதி இருக்க போவதில்லை. இதனால் அந்த போஸ்டிங் கண்டிப்பாக சிற்றரசுவிற்குதான் செல்லும் என்று கூறப்படுகிறது. மேயராக மா. சு அல்லது சேகர் பாபுவிற்கு நெருக்கமான ஒருவருக்கு பதவி வழங்கப்படலாம் என்கிறார்கள்.

சிற்றரசு
சிற்றரசுவை வைத்து உதயநிதி ஸ்டாலின் சென்னை திமுகவில் குட்டி ராஜ்ஜியம் நடத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இன்னொரு பக்கம் பொன் முடிக்கு நெருக்கமான மகேஷ் குமாரும் இந்த ரேஸில் இருக்கிறார். அவருக்கும் கூட கடைசியில் இந்த பதவி சென்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் கூறுகிறார்கள். இப்போதைக்கு சிற்றரசுவை துணை மேயராக முன்னிறுத்தும் ஆபரேஷன் சக்ஸஸ்தான்.. மார்ச் 4க்குள் இது இறுதி செய்யப்பட்டு.. மார்ச் 4ல் நடக்கும் மறைமுக தேர்தலில் உறுதி செய்யப்படும் என்கிறார்கள் திமுக வட்டாரத்தினர்!












Click it and Unblock the Notifications