முதல்வர் ஸ்டாலின் செய்த 'செயல்'.. எந்த முதல்வரும் செய்யத்துணியாத காரியமிது.. உதயநிதி நெகிழ்ச்சி
சென்னை ; இன்று கோவை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா வார்டில் பிபிஇ கிட் அணிந்து நோயாளிகளை சந்தித்து அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை கேட்டறிந்தார். துணிச்சலுடன் முதல்வர் ஸ்டாலின் செய்த இந்த செயலை சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பாராட்டி உள்ளார். எந்த முதல்வரும் செய்யத்துணியாத காரியமிது என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் சென்னையை விட தற்போது கோவையின் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதேபோல் கோவையை சுற்றியுள்ள திருப்பூர், ஈரோடு, சேலத்தில் பாதிப்பு மிகப்பெரிய உச்சத்தை அடைந்து வருகிறது.
தஞ்சை மருத்துமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைத்து கொடுத்த துபாய் தொழில் அதிபர்!
இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அங்கு தீவிரப்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அத்துடன் அவரே கொரோனா தொற்று அதிகமுள்ள ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
கோவை இ.எஸ்.ஐ
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இன்று காலை ஆய்வை முடித்துக்கொண்டு கோவை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அப்போது கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வர 50 கார் ஆம்புலனஸ் வாகனங்களை கொடி அசைத்து துவங்கி வைத்தார்.
கொரோனா வார்டில் ஸ்டாலின்
பின்னர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மருத்துவர்களை சந்தித்து, அங்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் படுக்கை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் முதல்வர் மு.கஸ்டாலின், கொரோனா வார்டிற்குள் சென்று நோயாளிகளை சந்தித்து பேச விரும்பினார். இதையடுத்து 'PPE' கிட் எனப்படும் பாதுகாப்பு கவச அடை அணிந்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் அதிகாரிகளுடன் கொரோனா சிகிச்சை பிரிவுகளில் நேரில் ஆய்வு செய்தார் அப்போது அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் நோயாளிகளுக்கு அங்கு சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் ஆய்வு செய்தார்.
அதிகாரிகளும் ஆய்வு
முதல்வருடன் சுகாதார துறை அதிகாரிகளும் கவச உடை அணிந்து ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின்போது சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் ரவீந்தரன், கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, முதன்மை செயலாளர் உமாநாத், ஆட்சியர் நாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தார்கள்
மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு
முதல்வர் மு.க.ஸ்டாலின் கவச உடையுடன் சென்று கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல் கூறியதை பலரும் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதியும் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி ட்விட்டரில் பாராட்டி உள்ளார்.
எந்த முதல்வரும் செய்ய துணியாதது
அதில்,கோவை ESI மருத்துவமனை கொரோனா வார்டில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் PPE உடையணிந்து ஆய்வு செய்துள்ளார்கள். எந்த முதல்வரும் செய்யத்துணியாத காரியமிது. கழக அரசு மக்களுடன் நிற்கிறது. நம் முதல்வரின் ஆற்றல்மிகு நிர்வாகத்திறன் தமிழகத்தை பெருந்தொற்றிலிருந்து மீட்டெடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.