வெளிச்சமாக வட்ட வட்டமாக.. முட்டுக்காட்டில் தோன்றிய மர்ம பொருள்.. யு.எப்.ஓவா? நடந்தது என்ன?
சென்னை: சென்னை முட்டுக்காடு கடல் பகுதியில் திடீரென பறக்கும் தட்டு போன்ற உருவங்கள் தோன்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுக்க யுஎப்ஓ எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள், பறக்கும் சாதனங்கள் குறித்து மக்கள் பலர் புகார் வைப்பது உண்டு. வித்தியாசமான பறக்கும் தட்டுக்களை பார்த்ததாக மக்கள் பலர் புகார் வைப்பது உண்டு.நாம் பல ஹாலிவுட் படங்களில் கூட இது போன்ற விமானங்களை பார்த்து இருக்கிறோம். அமெரிக்காவில் இது குறித்து பலர் புகார் வைத்து இருந்தாலும் கூட, கடந்த 2020ம் வருடம் வரை அமெரிக்கா இந்த யுஎப்ஓ குறித்து அதிகாரபூர்வமாக எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த தட்டுகளை மக்கள் பார்த்ததை மறுத்து வந்த அமெரிக்கா கடந்த 2020ம் வருடம் இப்படி தட்டுகள் பறந்தது உண்மைதான் என்று முதல்முறை ஏற்றுக்கொண்டது. இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரபூர்வமாக வீடியோ வெளியிட்டு, யுஎஃப்ஓ (பறக்கும் தட்டு) குறித்த வீடியோக்களை பகிர்ந்தது. இந்த வீடியோவில் பறக்கும் தட்டு போன்ற ஒரு சாதனம் கருப்பு நிறத்தில் சென்று கொண்டு இருக்கிறது. முதலில் மிக மெதுவாக செல்லும் இந்த சாதனம் சில நிமிடத்தில் மிக வேகமாக பறந்து மறைந்துள்ளது. யுஎஃப்ஓ எனப்படும் அடையாளப்படுத்த முடியாத பறக்கும் பொருள் இருப்பதை ஒப்புக்கொண்டாலும் கூட இது வேற்றுகிரக வாசிகளுடையது என்று பென்டகன் தெரிவிக்கவில்லை.
விசாரணை: சமீபத்தில் கூட இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. ஏலியன்களின் வாகனம் என்று அழைக்கப்படும் யுஎப்ஓ வாகனங்கள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் இது தொடர்பாக முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
முன்னாள் அமெரிக்க விமானப்படை உளவுத்துறை அதிகாரி ஓய்வு பெற்ற மேஜர் டேவிட் க்ரூஷ் இந்த விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களை குறிப்பிட்டார். அதன்படி 2004ஆம் ஆண்டில் "டிக்-டாக்"(Tic tac) வடிவம் கொண்ட யுஎப்ஓ ஒன்றை கண்டதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது மிக மிக வேகமாக பறந்தது.
மனிதர்களை குழப்பும் விதமாக இது பறந்தது. 2017ல் இதன் வீடியோ இணையத்தில் வெளியானது. அதன்பின் அதை ஆய்வு செய்தனர். இந்த "டிக்-டாக்"(Tic tac) வடிவம் கொண்ட யுஎப்ஓ எப்படி பறக்கிறது, அதன் தொழில்நுட்பம் என்ன என்று யாருக்குமே தெரியவில்லை, என்று கூறியுள்ளார்.
முட்டுக்காடு: இந்த நிலையில்தான் சென்னை முட்டுக்காடு கடல் பகுதியில் திடீரென பறக்கும் தட்டு போன்ற உருவங்கள் தோன்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 26-ந்தேதி மாலையில் கடலுக்கு மேலே மர்மமான முறையில் இந்த பொருள் காணப்பட்டு உள்ளது.
அடுத்தடுத்து நான்கு பொருட்கள் ஒன்றாக வானத்தில் பறந்து உள்ளன. இவை விமானமோ, பறவையோ, ட்ரோன்களோ இல்லை என்று கூறப்படுகிறது. ஓய்வுபெற்ற சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. பிரதீப் பிலிப் என்பவர் இதை அங்கு படம் பிடித்து உள்ளார்.
இதை வீடியோ எடுத்து உள்ளார். மாலை நேரத்தில் திடீரென வானத்தில் வெளிச்சம் போல தோன்றி உள்ளது. அதன்பின் இந்த உருவங்கள் தோன்றி உள்ளன. அவை என்ன பொருட்கள், ஏன் தோன்றின என்பது தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications