"ரியல் ஹீரோ விவேக்".. நமக்கு பொழுது இப்படியா விடியணும்.. ஒரு சிரிப்பு நாயகனின் நெருப்பு பக்கம்..!
நடிகர் விவேக் மறக்க முடியாத மாமனிதராக மண்ணில் தங்கிவிட்டார்
சென்னை: இன்றைய பொழுது நமக்கு, இப்படித்தான் விடிய வேண்டுமா? ஊரெல்லாம் ஓடி ஆடி மரம் நட்ட மனிதனின், மூச்சு நின்றே விட்டதா? "சாவே உனக்கு ஒரு சாவு வராதா" என்று நேரு இறந்தபோது, கண்ணதாசன் எழுதிய இந்த வரிகள்தான் நினைவுக்கு வருகிறது..!! நல்லவர்கள் எல்லாம் இப்படி நம்மை விட்டு ஒவ்வொருவராக போய் கொண்டிருக்கிறார்களே?!
Recommended Video
நேற்று விவேக்கை ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு சென்றபோதுகூட, இதன் விபரீதம் இவ்வளவு என்று நமக்கு தெரியாது.. காரணம், விவேக்கின் வயது அப்படி.. 60கூட எட்டவில்லை. மெத்த படித்த புத்திசாலி.. கலாப்பூர்வ ரசிகன்.. விழிப்புணர்வை சுவாசமாக்கி கொண்டவர்.. தன் உடல்நலம்குறித்த அக்கறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
இவருக்கு ஏற்கனவே சுகர் இருந்திருக்கிறது.. அதேசமயம் தினமும் உடற்பயிற்சியும் செய்து வந்துள்ளார்.. நேற்று முன்தினம், அந்த ஊசி போட்ட பிறகு மட்டும், மறுநாள் உடற்பயிற்சி எதுவும் செய்ய வேண்டாம் என்று அட்வைஸ் செய்துள்ளனர்.. அதன்படியே செய்யாமலும் இருந்துள்ளார்.. மற்றபடி சாப்பாட்டு விஷயத்தில் சரிவிகிதாச்சாரத்துடனேயே பயணப்பட்டு வந்துள்ளார். இருந்தபோதிலும், வலி எதுவுமின்றி சுருண்டு விழுந்து மயங்கிவிட்டார்..

எக்மோ
ஆஞ்சியோவில் சரிசெய்த பிறகும், நிலைமை சரியாகவில்லை என்பதால்தான் எக்மோ வைக்கப்பட்டுள்ளது.. எவ்வளவோ போராடியும் காப்பாற்ற முடியவில்லை. அதிர்ச்சி மரணம் என்பார்களே, அது இதுதான்.. நம் கண்ணெதிரிலேயே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று காலை வீட்டிற்கு சடலம் வந்து சேர்ந்துள்ளது.. விவேக்கை என்ன சொல்லி நாம் வழிஅனுப்புவது? எப்படி நம்மை நாமே தேற்றி கொள்வது?

டிராக்
கலைவாணர் என்எஸ் கிருஷ்ணனுக்கு தன் படங்களில் சில சமயம், சீரிய கருத்துக்களை புகுத்த சரியான வாய்ப்பு இல்லாமல் போகும்.. காரணம், அந்த படத்தின் கதைக்களம் அப்படி இருக்கும்.. சம்பந்தமே இல்லாமல் சமுதாய விஷயங்களை புகுத்தி வலியுறுத்தவும் முடியாது.. அதனால்தான், "காமெடி டிராக்" என்ற ஒன்றையே கலைவாணர் தன் படங்களில் நுழைத்தார்.. இது என்எஸ்கேவுக்கு பெருமளவு கை கொடுத்தது.. கதை பற்றியே கவலை இல்லை. தன் காமெடி டிராக் ஒன்று போதும்.. அந்த படத்தை தூக்கி செங்குத்தாக நிறுத்திவிடுவார் கலைவாணர்.

பாடி லாங்குவேஜ்
விவேக்கும் இப்படித்தான்.. கதைக்களம் இல்லாவிட்டாலும், தானே ஒரு டிராக்கை தயார் செய்தார்.. ரிஸ்க் எடுத்தார்.. தன்னுடைய டீமை உள்ளே இறக்கினார்.. சீரியஸ் கருத்துக்களை, எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு, காமெடி வார்த்தைகளை திணித்து எளிதாக்கினார்.. அதை பாமரனும் புரியும்படி பாடிலேங்குவேஜ் மூலம் கொண்டு போய் சேர்த்தார்.. வெகுஜன மக்கள் மனங்களில் விவேக் அசால்ட்டாக குடியேறியது இப்படித்தான்.

கருப்பொருள்
லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டே இந்த டிராக் அமைந்தது.. பார்ப்பதற்கு எளிதாக தோன்றினாலும், இந்த ஸ்கிரிப்ட் அவ்வளவு எளிது இல்லை.. அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளைதான் விவேக் கையில் எடுத்தார்.. சமூக ஒடுக்கமுறைகள், பிற்போக்குத்தனம் முதல் அனைத்தையும் "அடிமட்ட லெவல் வரைக்கும் போய் அலசினார்".. அவர்களிடம் இருந்தே காமெடியை எடுத்தார்.. அதில் வலிய கருத்துக்களை புகுத்தி, எளிய முறையில் நேர்த்தியாக கொண்டு போய் அதை அவர்களுக்கே பன்மடங்காக திருப்பி தந்த தந்திரசாலி..!

நடிகர்கள்
பொதுவாக, தேசிய விருதுகளில் காமெடிக்காக தனியாக ஒரு விருது வழங்கப்படுவதில்லை.. அப்படி மட்டும் வழங்கியிருந்தால், என்எஸ்கே முதல் கவுண்டமணி, விவேக் வரை இந்நேரம் ஒவ்வொரு படத்துக்கும் இவர்கள் எல்லாம் விருது வாங்கி கொண்டே இருந்திருப்பார்கள்.. தமிழ் சினிமாவின் தரமும் இந்திய அளவில் வேறுமுகமாக மிளர்ந்திருக்கவே செய்யும்!

வாய்ப்பு
படங்கள் வாய்ப்பு குறையும்போதே, தன் வாழ்வின் பக்கத்தை வேறு திசைக்கு லாவகமாக திருப்பி கொண்டார் விவேக்.. பொதுமக்களுடன் பொதுநலக்காரியங்களில் நெருக்கமாக தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டார்... கடந்த வருடம் அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் மரக்கன்று நட்டால் 2 மார்க் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். உடனே விவேக், "மரம் நடுதலை பாடத்திட்டத்தில் சேர்க்கலாமே" என்று கோரிக்கையை அப்போதும் அரசுக்கு முன்வைத்ததை மறக்க முடியாது!

அம்மா
லட்சக்கணக்கான மரங்களை நடும் பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டாலும், அதை குழந்தைகளிடமும் வேரூன்ற செய்யும் முயற்சியையும் கையாண்டார்.. அதில் உறுதியாகவும் நின்றவர்.. இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், விவேக்கின் அம்மா இறந்த நிலையில், அவரது இறுதி சடங்கையும் முடித்த கையோடு, ஒரு பள்ளிக்கு சென்று ஒரு மரம் நடும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்றால் நம்ப முடிகிறதா?

அம்மா
அது ஒரு அரசு பள்ளிக்கூடம். விவேக் வீட்டுக்கு பக்கத்தில்தான் இந்த ஸ்கூல் உள்ளது. விவேக்கை பார்த்ததும் பள்ளிக்குழந்தைகள் அவரை சுற்றிக்கொண்டு கண்ணீர் வடித்தனர்.. பெற்ற மகன், அப்பா, அம்மா என அடுத்தடுத்த உறவுகளை இழந்தாலும், தன்னுடைய கொள்கையை எந்த சூழலிலும் விட்டுத்தராமல் பயணித்தது, விவேக்குக்கு மட்டுமே சாத்தியம்!

பாசம்
அதனால், ரசிகர்கள் ட்விட்டரில், பாசத்தைக் கொட்டி அவரது கவலையை அவ்வப்போது கரைத்து கொண்டிருந்தார்கள்.. "மகன் இல்லாட்டி என்ன? இளைஞர்கள் எங்க எல்லோருக்கும் நீங்க தானே அப்பா?" தோள் கொடுத்து தூக்கிவிட்டது இளைஞர் பட்டாளம்... இறுதிவரை மாய வணிக கலாச்சாரத்தில் சிக்கி கொள்ளாதவர் விவேக்.. மலிவான அதேசமயம், எந்தவித சர்ச்சையிலும் மாட்டி கொள்ளாதவர்.. அப்பாவி முக பாவங்கள் கொண்டே, அவர் உச்சரித்த சீர்திருத்த வசனங்கள் ஒவ்வொன்றும், நம் மனசை கூர்மையாக துளைத்து கொண்டு போயின.

சமூக கட்டுப்பாடு
பல கல் நெஞ்சக்காரர்களையும் கரைத்துவிடும் சாகசம் தெரிந்தவர் விவேக்.. சிடுமூஞ்சிகளையும், ரசனை செத்தவர்களையும், சிரிப்பை மறந்தவர்களின் இயல்மறக்கடிக்க செய்யும் வித்தை தெரிந்தவர் விவேக்.. தெரியாமல்கூட யார் மனசையும் புண்படுத்த தெரியாதவர் விவேக்... சிரித்து சிரித்தே நம்மை டயர்டாக்கி விட்ட மாமனிதன் விவேக்.. தனிமனித அலம்பல்களை அநாயசமாக சிதற விட்டவர் விவேக்! ரசிகர்களின் எல்லாவித சமூக கட்டுப்பாடுகளையும் உடைத்தெறிந்தவர் விவேக்.. தரையில் இருந்து சிகரத்தை தொட்ட இந்த கலைஞனின் புகழை பேச, இன்னும் பல தலைமுறைகள் வரும்..!!
ஒரு புத்தகத்தில் படித்த வரிகள் நினைவுக்கு வருகிறது.. "நீ விரும்பிய மக்களின் இதயத்தில் நீ இருக்கும் வரை, நீ இறந்ததாக எடுத்துக் கொள்ளவே முடியாது"என்பதே... எவ்வளவு பெரிய உண்மை?!












Click it and Unblock the Notifications