நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... மர்மநபரை பிடிக்க போலீஸ் தீவிரம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Recommended Video
காவல்துறை கட்டுப்பாட்டு அறையை இன்று நண்பகல் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர், போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.
இதையடுத்து பதறியடித்து சென்று ரஜினிகாந்த் வீட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது.
பிசாசுத்தனமான அடி.. ஆரோக்கியம் போச்சுன்னா.. வாழ்க்கையே போச்சு.. ரஜினி திடீர் அட்வைஸ்!
போயஸ் கார்டன்
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் தெரிவித்துள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மேற்கொண்டு விவரம் கேட்ட போதே தொடர்பை துண்டித்துள்ளார் அந்த மர்ம நபர். இந்த தகவல் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் உடனடியாக ரஜினிகாந்த் வீட்டில் ஆய்வு நடத்தினர்.
புரளி கிளப்பியுள்ளார்
இந்த தகவலை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தாமல் ரகசியமாக வைத்த காவல்துறையினர் ரஜினிகாந்த் இல்லத்தில் ஆய்வு நடத்தினர். அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லாததால் புரளியை கிளப்புவதற்காக இந்த செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கும் காவல்துறையினர் காவல்துறை கட்டுப்பாட்டுக்கு அழைத்த தொலைபேசி எண்ணை வைத்து புரளியை கிளப்பிய நபரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக சைபர் கிரைம் போலீஸார் உதவியை அவர்கள் நாடியுள்ளனர்.
சமீப காலமாக
சென்னை உட்பட நாடு முழுவதும் பிரபலங்களை மையமாக வைத்து தொலைபேசியில் மர்ம நபர்கள் மிரட்டல் விடுக்கும் நிகழ்வு தொடர் கதையாக உள்ளது. இதனிடையே ரஜினிகாந்த் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் அதற்கான காரணங்களை கூறினாரா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு என்ற செய்தியறித்து அவரது ரசிகர்கள் போயஸ் கார்டன் முன்பு குவியத் தொடங்கினர். வெடிகுண்டு ஏதும் இல்லை திரும்பிச் செல்லுங்கள் என அவர்களை போலீஸார் அனுப்பி வைத்தனர்.
கோரிக்கை
இதனிடையே ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை விரைந்து பிடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள அவரது ரசிகர்கள், ரஜினியின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர். இந்த விவகாரத்தில் தேனாம்பேட்டை போலீஸார் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்ற விவரமும் வெளியாகவில்லை.