தொகுதி மறுவரையறை.. மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி- நவீன் பட்நாயக்
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் ஒடிஷா மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் பங்கேற்றார். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை ஒன்றிய அரசு தண்டிக்கிறது என்றும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை தீர்மானிக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழக அரசின் சார்பில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டம் நடைபெற்று வருகிறது. அரசு சார்பில் 29 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 3 மாநில முதலமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு பத்தமடை பாய், ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப் புடவை, கோவில்பட்டி கடலைமிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகிய தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த பொருட்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பெட்டியில் வைக்கப்பட்டு பரிசாக வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற மற்ற மாநிலங்களின் தலைவர்களுக்கு அந்தந்த மாநில மொழிகளில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அந்தந்த மாநில தாய் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.
கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் ஒடிஷாவில் இருந்து வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், மாநிலங்களின் ஜனநாயக உரிமையை காப்பதற்கான, பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான மிக முக்கியமான கூட்டம் இது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் இதனால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரை செய்வது சரியாக இருக்காது. இது மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு அளிக்கப்படும் அநீதி. மாநில உரிமைகளை பறிக்கும் செயல்களிலையே மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. தென்மாநிலங்கள் மக்கள்தொகையை கட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டிருக்கும்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை ஒன்றிய அரசு தண்டிக்கிறது. இந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications