தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அலர்ட்.. கொரோனா தடுப்பு மருந்துகளை வைத்திருக்க அறிவுரை
சென்னை: கொரோனா தடுப்பு அவசர மருந்துகளை போதியளவில் கையிருப்பு வைக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டு இந்தியாவிற்குள்ளும் வேகமாக பரவி பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. 2 ஆண்டுகளாக கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. அதன் பிறகு ஓரளவு நிலைமை சரியாகி வந்துகொண்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் நாடு முழுவதும் பரவலாக அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் இப்போதே முன்னெச்சரிகை நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதனிடையே தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் உட்பட மாநிலங்களின் சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத்துறை சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன.
அதன் படி அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு அவசர மருந்துகளை கையிருப்பு வைக்க வேண்டும் என்றும் வென்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசை மத்திய சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல் ஆக்சிஜன் பைப் லைன்கள் சீராக இயங்குகிறதா? என்பதையும் முன்கூட்டியே சோதனை செய்து பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகள் என அனைவரையும் மாஸ்க் அணிய அறிவுறுத்த வேண்டும் எனவும் தமிழக சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத்துறை இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துள்ளது. தமிழக அரசும் அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உட்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications