'ஒன்றிய அரசு'.. கருணாநிதி பாணியில்.. மோடி அரசுக்கு ஸ்டாலின் உணர்த்தும் பாடம்!
சென்னை: மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கை காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவரது மகனான மு.க.ஸ்டாலின் மாநில சுயாட்சி உரிமையை வலியுறுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஒன்றிய அரசு என்ற வார்த்தை அதன் ஒருபடி நிலை என்றே பார்க்க முடிகிறது.
Recommended Video
மத்திய அரசு என்றே சொல்லப்பட்டு வந்த வார்த்தை பதத்தை ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வந்த பிறகு ஒன்றி அரசு என்று உச்சரிக்கும் முறை அதிகரிக்க தொடங்கியது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாஜக முதலில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் , பின்னாளில் கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியது. ஆனால் இதை கண்டுகொள்ளாத திமுக அரசு, ஒன்றிய அரசு என்றே அழைக்க தொடங்கியது.

ஸ்டாலின் விளக்கம்
இது தொடர்பாக இன்று சட்டசபையில் பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், "ஒன்றிய அரசு என்ற சொல்லைக் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் பயன்படுத்துகிறோம். அதைப் பார்த்து யாரும் மிரளக் கூடாது. அந்தச் சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்துவோம் நமது அரசியலைப்பு சட்டத்தின் வரி, இந்தியா அதாவது பாரதம்-மாநிலங்களைக் கொண்ட ஒர் ஒன்றியமாய் இருக்கும்" என்று தான் உள்ளது. அதாவது india. that is bharat, shall be a union of states என்று தான் இருக்கிறது. சட்டத்தில் இல்லாததை பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.

மாநில சுயாட்சி
கருணாநிதி மாநில சுயாட்சி கொள்கையில் உறுதியாக இருந்தார், அதற்காக ராஜமன்னார் ஆணையம் அமைத்தார். அதை சட்டசபையிலும் தாக்கல் செய்தார். மேலும் மாநில உரிமைகள் எதையும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அந்த வகையில் ஸடாலினும் கடுமையாக குரல் எழுப்பி வருகிறார்.

ஜிஎஸ்டி கவுன்சில்
ஜிஎஸ்டி வரி பகிர்வு விவகாரத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. தமிழகம் போன்ற பெரிய மாநிலங்கள் செலுத்தும் வரியில் மிகக்குறைந்த அளவு பணத்தை மீண்டும் மத்திய அரசு வழங்குவதை சுட்டிக்காட்டி மாநிலங்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்று கூறி வருகிறது. இதேபோல் கல்வி மாநில பட்டியலில் இருக்க வேண்டும் என்றும், மும்மொழி அம்சம் உள்ள தேசிய கல்வி கொள்கையை ஏற்க முடியாது என்றும் கூறி வருகிறது. மத்திய அரசின் ஒவ்வொரு முடிவிலும் மாநிலத்தின் நலன் பாதிக்கப்பட்டால் குரல் கொடுக்கும் அரசாக ஸ்டாலின் அரசு கடந்த இரண்டு மாதங்க்ளாக இருக்கிறது.

துறைமுக மசோதா
எப்படி என்றால், இதுவரை இரண்டு முறை மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அண்மையில் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறு துறைமுகங்களை முறைப்படுத்துவதற்கு, மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி, ஒன்பது கடலோர மாநிலங்களின் முதல்வர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

ஸ்டாலின் கவனம்
முன்னதாக ஜூன் மாதம் 9ம் தேதி, 12 மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனத்தினர், சிறு கடனாளர்கள் 2 காலாண்டுக்கு கடனை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்து ஒன்றிய நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநரை வலியுறுத்த வேண்டும் என்று கோரியிருந்தார். இப்படி ஸ்டாலின் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு சவாலாகவே இருக்கிறது. அந்த வகையில் தான் ஒன்றிய அரசு என்று தான் அழைப்போம் என்று அழுத்தம் திருத்தமாக ஸ்டாலின் கூறியிருப்பதன் மூலம் மாநில உரிமைகளை மத்திய அரசு ஒடுக்கிவிடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருக்கிறார் என்பது தெரிகிறது.












Click it and Unblock the Notifications