மீண்டும் ஆளுநர் சர்ச்சை! மாணவர்களின் வாக்காளர் அட்டை எண் கேட்கப்பட்டது ஏன்? கடும் எதிர்ப்பால் வாபஸ்!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்களை ஆளுநர் மாளிகை அறிவுறுத்தலின்படி, பல்கலைக்கழகங்கள் சேகரித்த நிலையில், கடும் சர்ச்சை காரணமாக அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த மார்ச் 11ஆம் தேதி அன்று சென்னை கிண்டி ராஜ்பவனில் பல்கலைக்கழக வேந்தர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது வரும் 2024 மக்களவைத் தேர்தலில் கல்லூரி மாணவ மாணவிகள் 100 சதவீத வாக்குப்பதிவு செய்ய வேண்டியது அவசியம் குறித்து விளக்கிப் பேசியிருந்தார்.

ஆளுநரின் அறிவுரையின் பேரில் பல்கலைக்கழகங்கள் அவர்களுக்கு கீழ் உள்ள உறுப்பு கல்லூரிகளுக்கு மாணவர்களின் விபரங்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை கேட்டு சுற்றறிக்கையை அனுப்பி இருந்தனர்.
வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் நேரத்தில் மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டையை எதற்காக ஆளுநர் மாளிகை கேட்கிறது என்று கல்வியாளர்களும் பேராசிரியர்களும் போர்க்கொடி தூக்கினர்.
இந்நிலையில், மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்களை பெறும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தரப்பில் இருந்து, உறுப்பு கல்லூரிகளுக்கு நேற்று சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில், ஆளுநர் மாளிகை அறிவுறுத்தலின் பேரில் மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் சேகரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது.
கல்லூரி மாணவர்களின் வாக்காளர் அடையாள எண் விவரங்களை சேகரிக்க ராஜ்பவனில் இருந்து வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாகவும், மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை எக்செல் ஷீட் வடிவில் மார்ச் 19, 2024க்கு முன் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

மாணவர்களின் வாக்காளர் அட்டை விவரங்களைப் பெற ஆளுநர் முயல்வதாக சர்ச்சை எழுந்து, மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
எனினும், அத்தகைய தகவல் ஏன் கோரப்பட்டது என்பதற்கு ஆளுநர் மாளிகை, மாணவர் சமூகம் மற்றும் மாநில மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என திமுக எம்.பி பி.வில்சன் வலியுறுத்தியுள்ளார். "வாக்காளர் அடையாள அட்டை கேட்பதன் நோக்கம் என்ன? மாணவர்கள் தேர்தலுக்கு இலக்கா? யாருடைய உத்தரவின் பேரில் இந்த விவரங்கள் கோரப்பட்டன?
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் அரசியல் விளையாட்டுகளுக்கு ஆளுநர்களின் அலுவலகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனத்தில் ஆளுநர்கள் தலையிடுவதாக பல மாநிலங்கள் தெரிவித்துள்ளன.

இளம் மாணவர்களின் மனதில் தேவையற்ற செல்வாக்கு செலுத்த ஆளுநர் அலுவலகத்தின் நிர்வாக இயந்திரங்களைப் பயன்படுத்துவது தேர்தல் குற்றமாகும். எனவே, உயர்கல்வித்துறை அமைச்சர், தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். விரிவான விசாரணை நடத்தி, தவறு செய்த அதிகாரிகள் மற்றும் மாண்புமிகு குடியரசுத் தலைவர் மீது தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து உரிமைகளையும் மீறிய தமிழக ஆளுநரிடம் அறிக்கை கேட்க வேண்டும்." என பி.வில்சன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications