"இந்த போட்டோல இருக்கிறவனை தெரியுமா? தெரியாதுனு சொன்னவரை கத்தியால் வெட்டிய கும்பல்! சென்னையில் பகீர்
தாம்பரம்: தாம்பரத்தை அடுத்த சேலையூரில் புகைப்படத்துடன் உலா வந்த மர்ம கும்பல் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களை பட்டாகத்தியை வைத்து கண்மூடித்தனமாக தாக்கியதில் ஒருவர் படுகாயம் இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
Recommended Video
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (25) எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு வீட்டின் அருகே தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார்.
அப்போது ஆறு இருசக்கர வாகனத்தில் கஞ்சா போதையில் ஹெல்மெட் அணிந்து வந்த 12 பேர் கொண்ட மர்ம நபர்கள் கிருஷ்ணமூர்த்தியிடம் புகைப்படம் ஒன்றை காட்டி இவரை தெரியுமா என்று கேட்டுள்ளனர்.

கத்தியால் தாக்குதல்
இதற்கு தெரியாது என்று பதிலளித்த போது தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சிதறி ஓடியுள்ளனர். பின்னர் இதனை தட்டி கேட்க வந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கிவிட்டு சாலையில் கத்தியை வைத்து தேய்த்து கொண்டே சென்று அராஜாகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வீடுகளுக்குள் தஞ்சம்
இதனால் பதறிய அப்பகுதி மக்கள் தங்களின் வீடுகளுக்குள் சென்று தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை மீட்ட நண்பர்கள் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்தனர்.

மர்மநபர்கள்
போலீஸார் வருவதை கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் அந்த மர்ம நபர்கள் யார், கொலை செய்வதற்காக புகைப்படத்துடன் வலம் வருகிறார்களா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

பட்டாக்கத்தி
தற்போது சென்னையில் ஆங்காங்கே பட்டாக்கத்தியால் கேக் வெட்டுவது, சாலையில் உரசிக் கொண்டே செல்வது , ரயில் நிலையங்களில் கத்தியுடன் சுற்றித் திரியும் கலாச்சாரம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த போலீஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications