"சபாரி உடை.." முதல்வர் கிட்ட நெருங்கிய டிப்டாப் ஆசாமி.. அப்படியே தூக்கிய போலீசார்! தீவிர விசாரணை
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட நிலையில், அப்போது பரபர சம்பவம் ஒன்று நடந்த
தலைநகர் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே அப்போது அங்கு நடந்த ஒரு சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது.

அண்ணா அறிவாலயம்
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் கலைஞர் அரங்கத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் பாலு, தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் என 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திமுகவில் சமீபத்தில் தான் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் நியமனத்திற்குப் பின், நடைபெற்ற முதல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இதுவாகும்.

ஆலோசனைக் கூட்டம்
இந்தக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. வரும் டிச. 15இல் மறைந்த திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுக்க 100 இடங்களில் சிறப்பு பொதுக் கூட்டங்களை நடத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், டிபிஐ வளாகத்திற்குப் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. வரும் டிசம்பர் 18இல் திமுக பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

சபாரி உடை
இதற்கிடையே இன்று அங்கு நடந்த ஒரு சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் வந்திருந்த நிலையில், சபாரி உடை அணிந்திருந்த நபர் ஒருவர், முதல்வரை நெருங்கியுள்ளார். அவர் முதல்வரின் பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி சென்றுள்ளார். அனுமதியில்லாமல், அடையாளம் தெரியாத ஒருவர் முதல்வரை நெருங்கியதால் சந்தேகமடைந்த பாதுகாப்புப் படையினர் அவரை பிடித்து விசாரித்துள்ளனர். அதற்கு அவர் சிறை துறையில் இருந்து வருவதாக மட்டும் கூறியுள்ளார்.

நெருங்கிய மர்ம நபர்
உரிய அனுமதியின்றி அந்த நபர் முதல்வரை நெருங்கிய நிலையில், அவரது பதிலும் சந்தேகம் அளிப்பதாக இருந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவரை தேனாம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதற்கிடையே அண்ணா அரங்கத்தில் நடந்த விழா ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட நிலையில், அப்போது சபாரி அணிந்த இந்த நபர் மேடை வரை சென்றதும் தெரிய வந்தது. அந்த அடையாளம் தெரியாத நபரை தேனாம்பேட்டை போலீசார் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார்.

போலி அடையாள அட்டை
அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் சபாரி உடையில் இருந்த வசந்த குமார் என்பது தெரிய வந்தது. கோவையில் வசித்து வரும் அவர், பொள்ளாச்சி சப்-ஜெயிலில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் வார்டனாக பணிபுரிந்து வருவது தெரிய வந்தது. மேலும், அவரிடம் தமிழ்நாடு காவல் துறை என்ற பெயரிலான போலி அடையாள அட்டை இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். முன்னதாக அவர் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனையும் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.

கைது
இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பைக் கிளப்பியது. இது தொடர்பாக வசந்த குமார் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை கைது செய்துள்ளனர். அந்த நபர் எதற்காக எவ்வித முன்னனுமதியும் இல்லாமல் முதல்வர் ஸ்டாலினை நெருங்கினார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications