ஜெயலலிதா இல்லாததால்.. 'இந்த' விஷயத்தை விருப்பம்போல செய்த வேட்பாளர்கள்.. கவனித்தீர்களா
சென்னை: வழக்கமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவின் அனைத்து வேட்பாளர்களும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள். ஆனால் இந்த முறை ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு நாளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக மூன்றாவது முறையாகத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக இந்த முறை களமிறங்குகிறது.

தேர்தல் அறிக்கை
10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால், பொதுமக்களுக்கு இயல்பாகவே ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை உருவாகும். இதைச் சமாளிக்க பாமக, பாஜக, தாமாக உள்ளிட்ட கட்சிகளுடன் வலுவான கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது. மேலும், கடந்த வாரம் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலும் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை அதிமுக அறிவித்திருந்தது.

வேட்புமனு
மேலும், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் கடந்த மார்ச் 12ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதில் தான் அதிமுக வேட்பாளர்கள் வழக்கத்திற்கு மாறான ஒரு விஷயத்தைச் செய்துள்ளனர்.

ஜெயலலிதா ஸ்டைல்
கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில், கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் உட்பட 234 அதிமுக வேட்பாளர்களும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டார். அப்போது முதலில் 234 தொகுதி வேட்பாளர்களையும் அவர் அறிவித்தார். கடந்த தேர்தலில் ஆர்.கே. நகர் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட ஜெயலலிதா நல்ல நாள் பார்த்து ஏப்ரல் 25ஆம் தேதி மதியம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஒரே நாள் ஒரே நேரம்
அதன் பின்னர் கட்சி தலைமையிலிருந்து அனைத்து வேட்பாளர்களுக்கும் உத்தரவு சென்றது. அதன்படி கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் உட்பட 233 பேரும் ஒரே நாளில், ஏப்ரல் 28ஆம் தேதி மதியம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது அமைச்சர்களாக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் என அனைவரும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இந்த முறை அப்படியல்ல
ஆனால், இந்த முறை நிலைமையே வேறு! துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கடந்த வெள்ளிக்கிழமை போடிநாயக்கனூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அன்று அவருடன் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களைத் தவிர வேறு எந்த முக்கிய அதிமுக வேட்பாளர்களும் அன்று வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

முதல்வர் வேட்புமனு
அதன் பின்னர், திங்கள்கிழமை பல முக்கிய அதிமுக பிரபலங்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேபோல மூத்த அமைச்சர்களான செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்திலும், ஜெயகுமார் ராயபுரம் தொகுதியிலும் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

உத்தரவு இல்லை
ஜெயலலிதா இருந்தவரை வேட்பாளர்களுக்கு இந்த நாளில் இந்த நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு வரும். ஆனால், இந்த முறை அப்படி எந்தவொரு உத்தரவும் வரவில்லை. இதனால் வேட்பாளர்கள் தங்களுக்கு ஏற்ற நாளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

நல்ல நாள்
மேலும், ஜெயலலிதா இருக்கும்போது, அவரது ராசிக்கு ஏற்ப நல்ல நாளில் அனைத்து வேட்பாளர்களையும் வேட்பு மனு தாக்கல் செய்ய அக்கட்சித் தலைமை உத்தரவிடும். ஆனால், இந்த முறை ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் ராசிக்கு எந்த நாள், எந்த நேரம் நல்ல நேரமோ அதை வைத்தே வேட்பு மனு தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், முன்கூட்டியே வேட்புமனு தாக்கல் செய்தால், பிரசாரங்களில் கவனம் செலுத்தலாம் என்பதாலும் சீக்கிரம் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications