வீட்டு கேஸ் சிலிண்டர் விலை நினைத்த பார்க்க முடியாத உயர்வு.. மத்திய அரசு கைவிட எஸ்டிபிஐ வலியுறுத்தல்
சென்னை: இன்று வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ₹60 உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்த அதிரடி விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் (14.2 kg) ₹868.50 ஆக இருந்தது. இப்போது 60 ரூபாய் உயர்ந்துள்ளதால், ₹928.50 ஆக இருக்கிறது. கூடுதல் தொகை டெலிவரிக்கு 50 ரூபாய் வரை தர வேண்யுள்ளதால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் சிலிண்டர் விலை 980 ரூபாய் என்கிற அளவில் சென்னையில் உள்ளது. இந்த விலை உயர்வை கைவிட எஸ்டிபிஐ வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; "மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கக் கூட்டுப்படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள போரினால் இந்தியாவிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனத் தம்பட்டம் அடித்த ஒன்றிய மோடி அரசு, தற்போது அதன் முதல் பாதிப்பாகச் சமையல் எரிவாயு விலையை உயர்த்தியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. சர்வதேசச் சந்தையில் நிலவும் போர்ச் சூழலைச் சாக்காக வைத்து, பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான எரிவாயு விலையை உயர்த்துவது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தின் மீது தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதலாகும்.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான், "மேற்கு ஆசியப் பதற்றத்தால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை, எங்களிடம் போதிய கையிருப்பு உள்ளது" என ஒன்றிய அமைச்சர்கள் ஊடகங்கள் வாயிலாக நாட்டு மக்களுக்கு உறுதியளித்தனர். ஆனால், அந்த உறுதிமொழிகளைத் தற்போதைய விலை உயர்வு பொய்யாக்கியுள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது மட்டும் சுமையை மக்கள் மீது சுமத்தும் அரசு, விலை குறையும் காலங்களில் அதன் பலனை ஒருபோதும் மக்களுக்கு வழங்கியதில்லை.
ஏற்கனவே உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், இந்த எரிவாயு விலை உயர்வு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது. போர்ச் சூழலால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை அரசு தனது வரி வருவாயைக் குறைப்பதன் மூலம் ஈடுகட்ட வேண்டுமே தவிர, கார்ப்பரேட் எண்ணெய் நிறுவனங்களின் லாபத்திற்காக மக்களின் வயிற்றில் அடிப்பது ஒரு மக்கள் நல அரசுக்கு அழகல்ல.
எனவே, உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு விலையை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். போர் நிலவரத்தைக் காரணம் காட்டி கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் இத்தகைய மக்கள் விரோதப் போக்கை மோடி அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications