படியேற மாட்டேன்! எடுத்த சபதத்தை முடிக்கும் "அமைச்சர்".. கண் வைத்த முதல்வர்.. அடுத்து ஆக்சன்தான்!
சென்னை: ஆளும் திமுக அரசின் அமைச்சரவை மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வரும் நிலையில்தான் மூத்த அமைச்சர் ஒருவரின் துறை மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசின் அமைச்சரவை மாற்றப்பட போவதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சாக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவை அமைச்சராக்க வேண்டும் என்பதற்காக அமைச்சரவையில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வந்தன.
இதில் உதயநிதி ஸ்டாலின் பெறப்போகும் அமைச்சரவை பதவிகள் குறித்த குழப்பங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை.

குழப்பம்
அவருக்கு என்ன துறை கொடுக்கப்படும் என்பது இன்னும் குழப்பமாகவே இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் இந்த வருடம் இறுதியில் வெளிநாடு செல்கிறார். லண்டன் உள்ளிட்ட இடங்களுக்கு அரசு முறை பயணமாக செல்கிறார். இந்த நிலையில்தான் வெளிநாட்டு பயணத்திற்கு முன்பாக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில சீனியர் அமைச்சர்களுக்கான துறைகள் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.

மூத்த அமைச்சர் கேட்டார்
இந்த நிலையில்தான் கடந்த முறை அமைச்சரவை உருவாக்கத்தின் போது அப்செட்டில் இருந்த அமைச்சர் ஒருவருக்கான துறை மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற அந்த எம்எல்ஏ அமைச்சரான போது பெரிய துறை கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அப்போது பெரிய துறை வழங்கப்படவில்லை. இதனால் அவர் அமைச்சர்களுக்கான வீடுகளில் குடியேறாமல் முரண்டு பிடித்துக்கொண்டு இருந்தார்.

சபதம்
நான் சீனியர் எம்எல்ஏ.. எனக்கு ரொம்ப பெரிய துறை வேண்டாம். அட்லீஸ்ட் கொஞ்சமாவது பிரபலமான துறை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இப்படி சின்ன துறை கொடுத்துவிட்டார்களே என்று அந்த அமைச்சர் புலம்பி இருக்கிறாராம். அதோடு அமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்ட வீட்டில் குடியேற மாட்டேன் என்று ஹோட்டலிலும், சொந்த வீட்டிலும் தங்கி வருகிறாராம். தனக்கு அமைச்சரவையில் மாற்றம் வரும் வரை இதுதான் நிலைப்பாடு என்ற சபதத்தில் இருக்கிறாராம் அந்த சீனியர் அமைச்சர்.

வாய்ப்பு வந்தது - ஏற்கவில்லை
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அப்போதே அந்த சீனியர் அமைச்சரிடம் போக்குவரத்து துறை வேண்டுமா என்று கேட்டு இருக்கிறார்களாம். ஆனால் அவரோ எனக்கு அந்த துறை வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம்.

விரும்பவில்லை
வேறு சில காரணங்களுக்காக இந்த குறிப்பிட்ட துறையை அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சிவ சங்கருக்கு அந்த இலாக்கா போனது. இப்போது உதயநிதியை முன்னிறுத்தி விரைவில் செய்யப்பட உள்ள அமைச்சரவை மாற்றத்தில் அந்த அமைச்சருக்கு விருப்பமான இலாக்கா கொடுக்கப்படலாம் என்கிறார்கள். அந்த அமைச்சர் மன வருத்தத்தில் இருப்பது முதல்வர் ஸ்டாலினுக்கும் தெரியும். அவர் மீது முதல்வரும் ஒரு கண் வைத்து இருக்கிறார்.

ஆக்சன்
அவர் மூத்த அமைச்சர். முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் நெருக்கமாக இருந்தவர். அதனால் அவருக்கு சாதகமாக கண்டிப்பாக ஆக்சன் எடுக்கப்படும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை அறிந்த அமைச்சர் தரப்பும் குஷியில் இருக்கிறதாம். பெரிய துறைகளில் இந்த அமைச்சரவையில் மாற்றம் இருக்கும். இருந்தாலும் நிதித்துறை, மின்சாரத்துறை போன்ற துறைகளில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இல்லை என்றே திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications