என்ன கொடுத்தாலும் வாயை மூடிக்கிட்டு வாங்கிட்டு போகனுமா? எனக்கு பயம் இல்லை! வெளுத்து வாங்கிய ஊர்வசி!
சென்னை: சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் முதன்முறையாக தேசிய விருதை பெற்றிருக்கிறார் நடிகர் ஷாருக்கான். அதே நேரத்தில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஆடுஜீவிதம் - தி கோட் லைஃப் படத்துக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் தேசிய விருதுகள் திறமைக்காக மட்டுமே வழங்கப்பட வேண்டும் எனவும், எதைக் கொடுத்தாலும் அமைதியாக வாங்கிக் கொள்ள வேண்டுமா? என கோபத்தோடு கேள்வி எழுப்பி இருக்கிறார் நடிகை ஊர்வசி.
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு 71 வது தேசிய திரைப்பட விருதுகளை அறிவித்தது. இதில் சிறந்த நடிகருக்கான விருதை முதன்முறையாக ஷாருக்கான் வென்று இருக்கிறார்.
தமிழகத்தை பொறுத்தவரை சிறந்த துணை நடிகருக்கான விருது எம்எஸ் பாஸ்கருக்கும், சிறந்த இசைக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கும், சிறந்த கதை வசனத்திற்கான விருது ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

சிறந்த தமிழ் படமாக பார்க்கிங் தேர்வு செய்யப்பட்டது. மேலும் உள்ளொழுக்கு படத்தில் நடித்த நடிகை ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நடிகர்கள் மீது கடும் விமர்சனமும் எழுந்து இருக்கிறது. திறமையான பல நடிகர்களுக்கும் திரைப்படங்களுக்கும் தேசிய விருது அறிவிக்கப்படவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.
குறிப்பாக பிரிதிவிராஜ் சுகுமாரன் நடித்த ஆடுஜீவிதம் தி கோட் லைஃப் படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விருது அறிவிக்கப்படவில்லை. அந்த படத்துக்காக பல ஆண்டுகளாக உழைத்த பிரித்விராஜின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதை அடுத்து திரைப்பட விருதுகளையும் மத்திய அரசையும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய தேசிய விருது பெற்ற நடிகையான ஊர்வசி தனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். " எப்படி ஆடுஜீவிதம் படத்தை புறக்கணிக்க முடிந்தது என தெரியவில்லை. நஜீபின் வாழ்க்கையையும் அவரது துயரங்களையும் வெளிப்படுத்த உடல் ரீதியாகவும் உழைப்பு ரீதியாகவும் பெரும் உழைப்பை கொட்டி இருந்தார் பிரித்விராஜ். ஆனால் அவருக்கு தேசிய விருது வழங்கப்படவில்லை. எம்புரான் திரைப்படம் தான் இந்த புறக்கணிப்புக்கு காரணம் என அனைவருக்கும் தெரியும்.
விருதுகள் அரசியலாக மாறக்கூடாது. 2005இல் அச்சுவிண்டே அம்மா படத்துக்காக எனக்கு சிறந்த துணை நடிகை விருது வழங்கப்பட்டது. அப்போது நான் எதிராக குரல் எழுப்பவில்லை. காரணம் பரிசானியா படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது சரிதாவுக்கு வழங்கப்பட்டது. தனிப்பட்ட வாழ்க்கையில் போராடி வந்த சரிதாவுக்கு விருது கிடைத்ததால் நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது எனக்காக மட்டும் அல்ல சக நடிகர்களுக்காகவும் பேச வேண்டும். தென் தமிழகத்தில் பல திறமையான நடிகர்கள் இருந்தும் அவர்களுக்காக குரல் கொடுக்காவிட்டால் அந்த அங்கீகாரங்கள் கிடைக்காமல் போய்விடும்.
தேசிய விருதுகள் திறமைக்கு மட்டுமே வழங்க வேண்டும். வேறு எதனின் அடிப்படையிலும் வழங்க கூடாது. எதைக் கொடுத்தாலும் அமைதியாக வாங்கிக் கொள்ள வேண்டும் என அவர்களும் நினைக்க கூடாது. என்னை பொறுத்தவரை எந்த பயமும் இல்லை. இந்த கேள்வியை நான் எனக்காக அல்ல.. எனக்கு பின்னால் வருபவர்களுக்காக கேட்கிறேன்" என தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications