''தமிழ்நாட்டில் அமெரிக்க கடற்படை தளம்! தேசப்பாதுகாப்பு அடகு வைப்பு''! பகீர் கிளப்பும் ஜவாஹிருல்லா!
சென்னை: தமிழ்நாட்டை அமெரிக்காவின் கடற்படைத் தளமாக மாற்றும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி அண்மையில் மேற்கொண்ட அமெரிக்க பயணம் குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

''பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் மேற்கொண்ட அமெரிக்கப் பயணம், அமெரிக்க ராணுவத்தின் நீண்டநாள் கனவை நனவாக்கியுள்ளது. தமிழ்நாட்டின் காட்டுப்பள்ளி துறைமுகத்தை அமெரிக்கக் கப்பற்படையின் சீரமைப்புப் பணிக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று அம்பலமாக்கியுள்ளது. அந்த அறிக்கையில் 'அடுத்த தலைமுறை பாதுகாப்பு கூட்டாண்மை' எனும் தலைப்பின் கீழ் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டிருந்தது:''
"அமெரிக்கக் கடற்படை காட்டுப்பள்ளியில் (சென்னை) உள்ள லார்சன் அண்ட் டூப்ரோ(L&T) கப்பல் கட்டும் தளத்துடன் கப்பல் பழுதுபார்ப்பு ஒப்பந்தத்தை (Master Ship Repair Agreement (MSRA)) முடித்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள் இந்தியக் கப்பல் கட்டும் தளங்களில் சேவை மற்றும் பழுதுபார்ப்புக்கு இடைப்பட்ட அமெரிக்கக் கடற்படை கப்பல்களை அனுமதிக்கும், இது பல அரங்குகளிலும் அமெரிக்கா மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளுக்கான செலவு குறைந்த மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் நிலையான செயல்பாடுகளை எளிதாக்குகிறது." எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
''இந்த ஒப்பந்தத்தில் ராணுவத் தளவாட உற்பத்தி குறித்தும், இதனூடாக அமெரிக்காவிற்கு வெளியே ஆசியப்பகுதியில் அமெரிக்காவிற்கான ராணுவத் தளவாட, ஆயுத உற்பத்தி மையங்கள் தமிழ்நாட்டில் உருவாவதற்கான வழியும் பிறந்துள்ளது. காட்டுப்பள்ளியில் உள்ள துறைமுகத்தில் அதானியின் துறைமுக நிறுவனம் பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2018 ஆண்டே விலைக்கு வாங்கி இருந்தது.''
''6110 ஏக்கர் நிலப்பரப்பில் விரிவாக்கம் செய்ய அதானி நிறுவனம் திட்டமிட்டதைச் சுற்றுச்சூழல் மாசுபாடு கடல் அரிப்பு எனப் பல்வேறு பாதிப்புகள் உருவாகும் என்பதைக் கருத்தில் கொண்டு மண்ணின் மக்களான மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் கடுமையாக எதிர்த்து வந்தனர்.''
''தமிழ்நாட்டு நிலப்பரப்பில் ஒரு தனியார் நிறுவனத்துடன் அமெரிக்க ராணுவம் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வதையும், அந்த ஒப்பந்தமானது அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவிகரமாக இருக்கும் என வெள்ளை மாளிகையே கூறுவதையும் நிச்சயமாக உலக அரசியல் பார்வையில் நாம் அணுக வேண்டி பிரச்சினை. ''

''லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்துடன் போடப்பட்ட இந்த ஒப்பந்தம் மற்றும் அதானியின் துறைமுக விரிவாக்கத் திட்டம் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சி ஆகிய இடங்களில் ஒன்றிய அரசு அமைக்கத் திட்டமிட்டுள்ள ராணுவத் தளவாட உற்பத்திக் கேந்திரங்களும் தமிழ்நாட்டை ராணுவமயமாக்கும் ஆபத்தை விளைவிக்கும்.''
''எனவே அமெரிக்காவின் ராணுவத் தளவாட உற்பத்தி கேந்திரங்கள் அமைக்கும் முயற்சியைத் தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் கடும் அழுத்தம் கொடுத்துத் தடுத்து நிறுத்தி ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கு நம் தாய்த் தமிழ்நாட்டில் தளம் அமைத்துக் கொடுக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications