3-6 மாதங்களில்.. இந்திய பொருளாதாரமே பாழாகிவிடும்.. டிரம்ப் வர்த்தக போர்.. ப.சிதம்பரம் வார்னிங்
சென்னை: அமெரிக்காவின் வரிப்போர் காரணமாக இந்தியா பாழாகிவிடும். இன்னும் மூன்று முதல் ஆறு மாதங்களில், நமது பொருளாதாரம் பாழாகிவிடும். எல்லாம் காலியாகிவிடும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்து உள்ளார்.
வரும் வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் 23 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க இந்தியா முன் வந்துள்ளதாம்.

அதாவது இந்திய மதிப்பில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதிக்கான வரியை பாதிக்கு பாதி குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளதாம்.
அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்து உள்ளது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் இதனால் 4 சதவிகிதம் ஏற்றுமதி சரிந்து உள்ளது என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த வருடம் மட்டும் சுமார் 7 பில்லியன் டாலர் சரிவு இந்தியாவிற்கு ஏற்படும் என்று இந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாள் குறித்த டிரம்ப்
Reciprocal tariffs என்று அழைக்கப்படும் பரஸ்பர கட்டணங்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இதன் மூலம் இந்தியா நேரடியாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் வருடத்திற்கு சுமார் $7 பில்லியன் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருடா வருடம் இந்தியாவிற்கு இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
ப. சிதம்பரம் எச்சரிக்கை
இது தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் என்டிடிவி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அமெரிக்கா 1 படி இந்தியாவிற்கு நெருக்கமாக வந்தால் 2 படி விலகி செல்கிறது. அமெரிக்காவின் செயல்களை சமாளிக்க, சரியாக பதிலடி பணிகளை செய்ய இந்தியா தயாராக இருக்க வேண்டும்.
அமெரிக்காவின் செயல்கள்.. முக்கியமாக வரி கொள்கைகள் நம்ப முடியாதவையாக இருக்கின்றன. அவர்கள் என்ன மாதிரியான வரிகளை விதிப்பார்கள். எந்த அளவிற்கு நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்பது புதிராக உள்ளது. இதை சமாளிக்க இந்தியா தயாராக இருக்க வேண்டும். ஆனால் இந்தியா இதை எப்படி சமாளிக்க போகிறது.
இதை பற்றி இந்தியா வெளியில் பேசுவது இல்லை. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பேசுவது இல்லை. ஒரு அதிகாரபூர்வ அறிக்கை கூட கொடுப்பது இல்லை. எதிர்கட்சிகளுடன் ஆலோசனைகளை செய்வது இல்லை. என்ன நடக்கிறது என்று மக்களுக்கும் தெரியவில்லை, எதிர்க்கட்சிகளுக்கு தெரிவதில்லை.
அமெரிக்காவை சமாளிக்க கொள்கைகளை வகுக்க வேண்டும். உலகம் முழுக்க WTO விதிகள் உள்ளன; பலதரப்பு மற்றும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளன; சர்வதேச சட்டங்கள் மற்றும் மரபுகள் உள்ளன. எனவே இந்திய உள்ளிட்ட பல நாடுகளின் மீது கட்டணங்களை விதித்தால் நீங்கள் அதற்காக விவாதத்தை நடத்த வேண்டும். ஆனால் இங்கே மத்திய அரசு எதிர்கட்சிகளுடன் ஆலோசனைகளை செய்வது இல்லை. என்ன நடக்கிறது என்று மக்களுக்கும் தெரியவில்லை,
உதாரணமாக டிரம்ப் ஒருவேளை இந்தியாவைத் தேர்ந்தெடுத்து அதிக வரிகளை விதிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவைத் தேர்ந்தெடுத்து, இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகள் அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படி நடந்தால் இந்தியா பாழாகிவிடும். இன்னும் மூன்று முதல் ஆறு மாதங்களில், நமது பொருளாதாரம் பாழாகிவிடும். எல்லாம் காலியாகிவிடும்.
டிரம்ப் ஒவ்வொரு நாட்டிற்கும் தனியாக வரிகளை விதிக்கிறார். தனியாக வரிகொள்கைகளை வகுத்து வருகிறார். இதை சமாளிக்க நாம் தயாராகி இருக்க வேண்டும், என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications