திடீர் திருப்பம்.. நொய்டாவில் தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த யோகி.. கொரோனா பரவலால் முடிவு!
சென்னை: உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அதேபோல, இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கமும் அதிகரித்துள்ளது. கொரோனா அதிகரிப்பால், சட்டமன்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தை ரத்து செய்துள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரங்களை செய்துவருகிறார்கள். உத்திரப்பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியமைக்க பிரதமர் மோடியும் வந்து பிரசாரம் செய்துபோனார். பி.ஜே.பி, சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என நான்குமுனைப் போட்டி நிலவிவருகிறது.

கொரோனா
ஓமைக்ரான் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் பரப்புரைகள் நடத்த அரசியல் கட்சிகள் யோசித்து வருகின்றன. மத்திய அரசும் அதிக அளவில் கூட்டம் கூடாமல் பார்த்துக்கொள்ள அறிவுரை வழங்கி இருக்கிறது. தேர்தல் பரப்புரைகளால் மக்கள் கூட்டம் கூடி, கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் என மருத்துவர்களும் எச்சரித்துள்ளனர்.
உலக சுகாதார மையம், இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் அதிகரிக்கும் என எச்சரித்திருக்கிறது. இதையடுத்து, சட்டமன்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தை ரத்து செய்துள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். நொய்டாவில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் நாளை யோகி கலந்துகொண்டு பரப்புரை செய்ய இருந்தார். அந்த நிகழ்ச்சி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

நொய்டாவில் அதிகரிக்கும் கொரோனா
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கொரொனா பரவல் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. அங்குதான் யோகி ஆதித்யநாத் செல்வதாக இருந்ததால், அவருக்கு கூடுதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து பரப்புரைக் கூட்டம் திட்டத்தை யோகி ஆதித்யநாத் ரத்து செய்துள்ளார்.

ரத்து செய்த காங்கிரஸ்
பரேலி மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில் மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். மாரத்தான் நிகழ்ச்சியின் போது பெண்கள் பலரும் முகக்கவசம் அணியவில்லை. இதற்கு கண்டனங்கள் வந்தநிலையில், உ.பியில் நடைபெற இருந்த அனைத்து பொதுக்கூட்டங்களையும் ரத்து செய்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அம்மாநிலம் முழுவதும் நடைபெற இருந்த 8 பொதுக்கூட்டங்களும் நடைபெறாது என தெரிவித்துள்ளது.

தேர்தல் நடக்குமா
உத்திரப்பிரதேச தேர்தல் நெருங்கும் நேரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், சட்டசபைத் தேர்தல் குறித்து அம்மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளுமே கலக்கத்தில் இருக்கின்றன. இதனிடையே உ.பி. தேர்தல் குறித்து நாளை தேர்தல் ஆணையம் முக்கிய முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications