2 பிளான்.. எது நடந்தாலும் நல்லதுதான்.. திடீர்ன்னு டெல்லி பறந்த "தங்கம்" ஸ்டாலின் தந்த முக்கிய டாஸ்க்
சென்னை: தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை டெல்லி புறப்பட்டார். முக்கியமான 2 திட்டங்களை மனதில் வைத்து இவர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் மக்களுக்கு வேக்சின் போடுவது தற்போது அதிகரித்து உள்ளது. தினமும் வேக்சின் போடப்படும் மக்களின் எண்ணிக்கை 2.3 லட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்திலேயே வேக்சின் தயாரிக்கும் திட்டத்தில் தமிழக அரசு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

எப்படி
இதன் ஒரு கட்டமாகவே நேற்று முதல்நாள் முதல்வர் ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி மையத்தை பார்வையிட்டார்.2012ல் திறக்கப்பட்ட இந்த மையம் கிட்டத்தட்ட 9 வருடமாக இயங்கவே இல்லை. மத்திய அரசு சார்பாக கட்டப்பட்டு இருக்கும் இந்த மையம், வேக்சின் உற்பத்தி செய்யப்படாமல் மூடப்பட்டுள்ளது.

கோரிக்கை
இந்த வேக்சின் உற்பத்தி மையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இதற்கான உதவிகளை செய்ய தயார் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். மத்திய அரசு இதை கொஞ்சம் கவனித்து இருந்தால், தமிழகத்திலேயே பல மில்லியன் டோஸ் வேக்சின்களை உற்பத்தி செய்திருக்க முடியும்.

டெல்லி
இந்த நிலையில்தான் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை டெல்லி புறப்பட்டார். மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்ட சிலரை அவர் சந்திக்க உள்ளார். இந்த பயணத்தில் எம்பி டி.ஆர். பாலுவும் உடன் சென்றுள்ளார். இதில் தங்கம் தென்னரசுக்கு முதல்வர் ஸ்டாலின் இரண்டு முக்கியமான பொறுப்புகளை கொடுத்துள்ளார்.

எப்படி
அதன்படி இந்த வேக்சின் மையத்தை உடனே மத்திய அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வந்து அங்கு கோவாக்சின் அல்லது கோவிட்ஷீல்ட் அல்லது ஸ்புட்னிக் உற்பத்தியை தொடங்க வேண்டும். மத்திய அரசு உடனே இங்கு வேக்சின் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும். இதுதான் முதல் டாஸ்க். இதில் இன்னொரு விஷயம், இந்த வேக்சின் மையத்தை மத்திய அரசு ஏற்காது. 10-15 வருட குத்தகை அடிப்படையிலேயே இது தனியாருக்கு அளிக்கப்படும்.

தனியார்
இதனால் தமிழக அரசே இதை குத்ததைக்கு எடுக்கும் திட்டமும் உள்ளது. இதை பற்றித்தான் இன்று தங்கம் தென்னரசு பேசுவார் என்கிறார்கள். சிப்காட் மூலம் இதை குத்தகைக்கு எடுத்து பணிகளை தொடங்கும் திட்டத்தில் உள்ளனர். இதற்கான அனுமதியை பெறவும் திட்டங்கள் நடக்கின்றன. இதனால் இந்தியாவில் வேக்சின் தயாரிக்கும் ஒரே மாநில அரசு என்ற பெரும் தமிழக அரசுக்கு கிடைக்கும்.. தமிழகத்தின் வேக்சின் தேவையும் பூர்த்தியாகும்.

நல்லது
ஒருவேளை தமிழக அரசுக்கு இந்த மையத்தை குத்தகைக்கு விடவில்லை என்றாலும், தனியார் நிறுவனம் மூலம் இதை இயங்க வைத்து, தமிழகத்திற்கு 50%க்கும் அதிகமான வேக்சினை ஒதுக்க ஒப்பந்தம் போடப்படும். இரண்டில் எது நடந்தாலும் தமிழகத்திற்கு பலன் கிடைக்கும் என்கிறார்கள். இன்று திடீரென தங்கம் தென்னரசு டெல்லி புறப்பட்டது இதை காரணமாகத்தான். இதனால் விரைவில் வேக்சின் தட்டுப்பாட்டில் பெரிய மாற்றம் வரும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications