அதிமுக விமர்சிப்பவர்களை இயேசு தண்டிப்பாரா?.. முதல்வர் என்ன யூதாஸா?.. வைகோ கேள்வி
சென்னை: அதிமுகவை விமர்சிப்பவர்களை இயேசு தண்டிப்பார் என கூறும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்ன யூதாஸா என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசினார்.
அப்போது அவர் கூறுகையில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி கூட்டங்களிலும் மக்கள் கிராம சபை கூட்டங்களிலும் கோடிக்கணக்கான மக்களை சந்தித்து வருகிறார்.
முதல்வர்
திமுக தலைவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆதரவு உள்ளது. முதல்வர் உள்பட 8 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஆளுநரிடம் ஆதாரப்பூர்வமாக எடுத்து வைத்துள்ளார். மேலும் தொகுதி பங்கீடு குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.
மரியாதை
அனைத்து தொகுதிகளிலும் நேரில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன். வரும் சட்டசபை தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் இதற்காக வாழ்த்து தெரிவிக்கவும் மரியாதை நிமித்தமாகவும் ஸ்டாலினை சந்தித்தேன்.
இயேசு
மேலும் அதிமுகவை விமர்சிப்பவர்களை இயேசு தண்டிப்பார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இவ்வாறு கூற அவர் என்ன யூதாஸா என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரம்
தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேயராக இருந்த போது சென்னைக்கு ஸ்டாலின் செய்தது என்ன என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன.