“முதலமைச்சர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை".. வாக்கெடுப்பில் பங்கேற்காததற்கு வைகோ சொன்ன காரணம்!
சென்னை: மதிமுகவின் 2 எம்.எல்.ஏக்களும் இன்று தமிழக சட்டசபையில் நடந்த விஜய் அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காதது ஏன் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும், தவெக தலைவர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை என வைகோ பேசியுள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் விஜய் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக எம்.எல்.ஏக்களும் தேமுதிகவின் ஒரே எம்.எல்.ஏ.வான பிரேமலதா விஜயகாந்தும் வெளிநடப்பு செய்தனர். ஆனால் விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் எஸ்.பி வேலுமணி அணி, விஜய் அரசுக்கு ஆதரவளித்தது. இதனால் விஜய் அரசுக்கு 144 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைத்தது. இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசு வெற்றி பெற்றது.

விஜய் அரசுக்கு எதிராக அதிமுகவின் 22 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். இந்நிலையில் மதிமுகவின் 2 எம்.எல்.ஏக்களான சீர்காழி எம்.எல்.ஏ செந்தில் செல்வன், கடையநல்லூர் எம்.எல்.ஏ திமு ராஜேந்திரன் ஆகியோர் இன்றைய சட்டசபை கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். அவர்கள் இருவரும் சென்னையில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற கட்சியின் நிர்வாகக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மதிமுகவின் மிக முக்கியமான நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றதால் மதிமுக எம்.எல்.ஏக்கள் 2 பேரும் இன்றைய சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவித்தார். மதிமுகவின் 2 எம்.எல்.ஏக்களும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், "ம.தி.மு.க.வின் முக்கியமான நிர்வாகக்குழு இன்று நடைபெற்ற நிலையில், அதில் மதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருவரும் கலந்து கொள்வது அவசியம் என்று நாங்கள் முடிவெடுத்ததால், அவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். அவர்கள் சட்டசபைக்கு சென்றிருந்தால் த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்திருப்பார்களா? என்பது போன்ற கற்பனையான கேள்விகளுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது.
ஜோசப் விஜய் ஆட்சியை வரவேற்கிறோம் என்று நாங்கள் ஏற்கனவே சொல்ல்விட்டோம். விஜய்க்கு ஆதரவா? எதிர்ப்பா? என இப்போது கூற முடியாது. விஜய் அரசின் செயல்பாடுகளை 6 மாதங்கள் உற்றுநோக்குவோம். தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறோம், தோழமை தொடரும். திராவிட கட்சிகளை தோற்கடிப்பதற்காக விஜய் அரசியலுக்கு வரவில்லை. தான் ஆட்சியமைக்க வேண்டும் என்றுதான் விஜய் அரசியலுக்கு வந்தார்.
அதிமுக ஆதரவு கொடுப்பதற்கு முன்பே விஜய்க்கு பெரும்பான்மை இருந்தது. அ.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கும்போது வேண்டாம் என விஜய் சொல்வாரா? விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என்பது என் கருத்து. 717 டாஸ்மாக் கடைகளை மூடிய முதலமைச்சரின் செயலுக்கு நன்றி. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அமல்படுத்த வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய நிலையில் இன்று நடத்தப்பட்ட மதிமுகவின் நிர்வாகக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று, தமிழ்நாட்டில் 17 ஆவது சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23, 2026 இல் நடைபெற்று, தமிழ்நாட்டு மக்கள் ஜனநாயகத்தின் தீர்ப்பை வழங்கி உள்ளனர். அதன்படி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், மதச்சார்பின்மை, சமூக நீதி, கூட்டாட்சிக் கொள்கை, போதை கலாச்சார ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு இவற்றைப் பாதுகாத்து, இந்த நெறிகளில் இருந்து இம்மி அளவும் பிசகாமல் தமிழக அரசின் ஆட்சியை நடத்திட வேண்டும் என்று இந்த நிர்வாகக் குழு கேட்டுக்கொள்கிறது. என்பதாகும்.













Click it and Unblock the Notifications