வேறொன்னும் இல்ல; பிரசாரத்துக்கு நாள் கம்மியா இருக்குறனாலதான் உதயசூரியனில் போட்டியிடுகிறோம் - வைகோ
சென்னை: திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுகவுடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
வாக்கு சேகரிப்பில் ஈடுபட குறைவான நாட்களே இருப்பதால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்று வைகோ தெரிவித்தார்.
தொகுதி பங்கீடு தொடர்பாக மதிமுகவுடன், திமுக விறுவிறுப்பாக பேச்சு நடத்தி வந்தது. மதிமுக 12 தொகுதிகள் கேட்டது. திமுக 6 தொகுதிகள் தருவதாக கூறியதால் இழுபறியுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்ட்டுள்ளது . நீண்ட இழுபறிக்கு இடையே பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது.
மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியது திமுக... உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் மதிமுக சம்மதம்!
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது.திமுக கூட்டணியில் 6 தொகுதிகளிலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த 6 தொகுதிகள் என்னென்ன? இந்த தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்று மதிமுக அறிவித்துள்ளது
திமுகவுடனான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்துக்கு பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டியளித்தபோது கூறியதாவது:- திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுகவுடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டோம். சனாதன சக்திகளை முறியடிப்பது என உறுதியேற்று திமுகவுக்கு ஆதரவாக இருப்போம். ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன் என கருணாநிதிக்கு உறுதி அளித்திருந்தேன். வாக்கு சேகரிப்பில் ஈடுபட குறைவான நாட்களே இருப்பதால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்று வைகோ கூறினார்.