நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்த மதிமுக.. வைகோ திடீர் முடிவு
சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தவெக ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. திமுக கூட்டணி கட்சிகளான சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் ஆதரவுடன் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. தவெக 13ம் தேதிக்குள் (இன்று) சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் உத்தரவிட்டார். அதன்படி தவெக ஆட்சியை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. மதிமுக எம்எல்ஏக்கள் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று நான்கு முனை போட்டி நிலவியது. இதில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் விஜய் முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் ஆதரவுடன் தவெக ஆட்சியை பிடித்துள்ளது.

மேலும் அதிமுகவில் வேலுமணி அணி மற்றும் அமமுக எம்எல்ஏ காமராஜ் ஆகியோர் தவெகவுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர். ஆளுநரின் உத்தரவுப்படி தவெக ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இந்த வாக்கெடுப்பில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல், அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட காமராஜ், அதிமுகவில் வேலுமணி ஆதரவு அணி ஆகியோர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பாமக இந்த வாக்கெடுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர். பாஜக இந்த வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதாக அறிவித்தனர். தேமுதிக, மமக, மஜக, கொமதேக, அதிமுக எடப்பாடி பழனிசாமி ஆதரவு அணி உள்ளிட்ட கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு எதிராக வாக்களித்தன. திமுக இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு நடத்தியுள்ளனர். இந்த வாக்கெடுப்பில் மதிமுக எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். சீர்காழி தொகுதியில் செந்தில் செல்வன், கடையநல்லூர் தொகுதியில் ராஜேந்திரன் வெற்றி பெற்றனர். ஆனால் அவர்கள் 2 பேருமே சட்டசபைக்கு வரவில்லை. வாக்கெடுப்பில் பங்கேற்காமல் மதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்துவிட்டனர். இதனால் சட்டமன்றத்தில் அவர்கள் 2 எம்எல்ஏக்களின் இருக்கையும் காலியாக இருந்தன.












Click it and Unblock the Notifications