இனத்தை அழித்த பாவி காங்... அற்ப புத்திக்காரர்கள்.. என்னை எம்பியாக்கியது திமுக எம்எல்ஏக்கள்.. வைகோ
Recommended Video
சென்னை: இனத்தை அழித்த பாவிகளான காங்கிரஸ் தயவில் நான் எப்போதும் எம்பியாக மாட்டேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசம் பொங்க கருத்து தெரிவித்தார்.
காஷ்மீர் விவகாரத்தில் முதல் குற்றவாளி காங்கிரஸ்தான் என மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் வைகோ குற்றம்சாட்டியிருந்தார். இதை காங்கிரஸ் கட்சி கண்டித்தது. வைகோவை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் வைகோ அரசியல் நாகரீகமற்றவர். கூட்டணியில் இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சியை அவர் விமர்சிக்கிறார். காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டதாக வைகோ பேசியது தவறு.
மல்லை சத்யா
காங்கிரஸ் என்ன துரோகம் செய்தது என்று அவர் கூற வேண்டும். வைகோ யாருக்குமே விசுவாசமாக இருந்தது கிடையாது என அழகிரி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு சாத்தான் வேதம் ஓத வேண்டாம் என மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தெரிவித்திருந்தார்.
திமுக எம்எல்ஏக்கள்
இந்த நிலையில் ஸ்டெர்லைட் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடிவிட்டு செய்தியாளர்களை வைகோ சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் காங்கிரஸ் தயவில் எம்பியாகவில்லை. என்னை எம்பியாக்கியது திமுக எம்எல்ஏக்களும் ஸ்டாலினும்தான்.
கூடுதலாக 6 எம்எல்ஏக்கள்
திமுகவுக்கு 108 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஒரு மாநிலங்களவை எம்பிக்கு 34 எம்எல்ஏக்கள் வாக்கு தேவை. அப்படி பார்த்தால் திமுக சார்பில் நான், சண்முகம், வில்சன் ஆகிய 3 பேருக்கு 102 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். தேவையை காட்டிலும் அதிகமாக 6 எம்எல்ஏக்கள் திமுகவில் உள்ளனர்.
கோபம்
எனவே இதில் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏகூட எனக்கு வாக்களிக்கவில்லை. எனவே நான் காங்கிரஸ் தயவில் எம்பியாகவில்லை. காங்கிரஸின் தயவில் நான் எம்பியானதாக கூறுவது கே எஸ் அழகிரிக்கு என் மீதுள்ள கோபம், ஆத்திரம், வன்மம்.
இனத்தை அழித்த பாவிகள்
இனத்தை அழித்த பாவிகளான காங்கிரஸின் தயவில் நான் எப்படி எம்பியாவேன். அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. கடந்த 1998-இல் வாஜ்பாயுடன் அதிமுக கூட்டணியின் போது எம்பியானேன். அது போல் 1999-இல் பாஜக, திமுக கூட்டணியில் எம்பியானேன். இது வரை காங்கிரஸ் தயவில் நான் எம்பியானதில்லை.
மோடி
அமித்ஷா கூறிதான் நான் காங்கிரஸை விமர்சித்தேன் என கூறுவதா. அற்ப புத்தி உள்ளவர்களுக்கு பதில் கூற வேண்டிய அவசியமில்லை. நியூட்ரினோ, மேகதாது, ஹைட்ரோகார்பன், அணை பாதுகாப்பு மசோதா ஆகிய விவகாரங்களில் மோடியை சந்தித்து எதிர்த்து பேசியவன் நான்.
கோபம்
அப்படியிருக்கையில் அமித்ஷா கூறியதற்காக நான் காங்கிரஸை எதிர்த்து பேசியிருப்பேனா. நான் காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவன். பெருந்தலைவர் காமராஜர் எங்கள் வீட்டில்தான் தங்கியிருந்தார். என் மீது கோபம் இருந்தால் வேறு ஏதாவது திட்டித் தீர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் தயவில் எம்பியானேன் என்ற தவறான தகவலை சொல்லாதீர்.
கண்டிப்பு
மன்மோகன் சிங்கை நண்பராக பாராட்டுகிறேன். ஆனால் பிரதமராக கண்டிக்கிறேன். காஷ்மீர் விவகாரத்தில் 12 காங்கிரஸ் எம்பிக்கள் வாக்களிக்கவில்லை. அப்படியென்றால் அவர்கள் பாஜகவிடம் காசு வாங்கிவிட்டனரா. நான் எந்த காலத்திலும் கொள்கையை விட்டு கொடுத்தாதவன் என்பதை அனைவரும் அறிவர் என்றார் வைகோ.