மிருசுவில் இனப்படுகொலையாளி விடுதலைக்கு வைகோ எதிர்ப்பு
சென்னை: ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்த ராணுவ அதிகாரி சுனில் ரத்ன நாயகேவை இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே விடுதலை செய்திருப்பதை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக எதிர்த்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றும் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.
Recommended Video
இது தொடர்பாக வைகோ அனுப்பியுள்ள கடிதம்:
பேரழிவு நோயாக இந்த உலகத்தையே சூழ்ந்து அரசர்கள் அதிபர்கள், சாதாரண மனிதர்கள் வரை அனைத்து நாடுகளையும் கொரோனா அச்சுறுதிக்கொண்டு இருக்கின்றது. நாட்டு மக்களுக்கு நீங்கள் ஆற்றுகின்ற உரைகளில், நாட்டைப் பற்றி எவ்வளவு ரண வேதனையும், மனத் துன்பமும் அடைந்துள்ளீர்கள் என்பது தெரிகிறது.
ஒவ்வொரு நாளும் கொரோனா நோய் நாடுகளை நசுக்கி, மனித உயிர்களைக் காவு கொண்டு, பொருளாதார நலிவையும் தருகிறது. 138 கோடி மக்கள் வாழ்கின்ற நம்முடைய நாட்டில் இக்கொரோனா நோயினால் ஏற்படும் விபரீதங்களை எண்ணி நான் மிகுந்த கவலைப்பட்டாலும், இந்த சோதனையான வேளையில் மக்களோடு சேர்ந்து அரசினுடைய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதில் உறுதியாக இருக்கிறேன். அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புத் தருமாறு எங்கள் கட்சித் தோழர்களை வேண்டியுள்ளேன்.
இலங்கை ராணுவ அதிகாரி
தமிழ்நாட்டில் பிரசுரமாகும் நாளேடான தினமணி பத்திரிக்கை இன்று ஏப்ரல் 02 ஆம் தேதி, இலங்கையில் நடப்பது குறித்து எழுதியுள்ள தலையங்கத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். இலங்கையில் தமிழர்களை ஈவு இரக்கமில்லாமல் படுகொலை செய்து, கொழும்பு உயர்நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்ன நாயகேவை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே விடுதலை செய்திருக்கிறார். 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி சொந்த நாட்டிலேயே அகதிகளான 7 தமிழர்களை மிகக் கொடூரமாக இலங்கை இராணுவ அதிகாரி சுனில் ரத்ன நாயகேவும் மற்றும் இலங்கை இராணுவத்தினர் 13 பேரும் படுகொலை செய்தனர்.
மிருசுவில் தமிழர் படுகொலை
இந்தத் தமிழ் அகதிகள் யாழ்ப்பாணத்துக்கு அருகில் உடுப்பிடியில் தங்குவதற்கு அரசாங்கத்திடம் அனுமதி பெற்று அவர்கள் சொந்த கிராமமான மிருசுவில் தங்குவதற்குச் சென்றனர். சிங்கள இராணுவ அதிகாரி சுனில் ரத்ன நாயகே அவர்களைக் கைது செய்து, கண்களைக் கட்டி இழுத்துச் சென்று கழுத்தை அறுத்துக் கொலை செய்து கழிவு நீரோடையில் சடலங்களைப் போட்டான். கொல்லப்பட்டவர்களில் 5 வயது, 13 வயது, 15 வயது சிறுவர்களும் இருந்தனர். அந்தக் கொடூரத் தாக்குதலில் படுகாயங்களோடு தப்பிய ஒரு தமிழர் சொன்ன தகவலின் பேரில், சடலங்கள் மீட்கப்பட்டன.
ராணுவ அதிகாரிக்கு தூக்கு
உடற்கூறு பரிசோதனை செய்த மருத்துவ அதிகாரி நடந்த படுகொலையை உறுதி செய்தார். மனித உரிமை நிறுவனங்கள் நீதி கேட்டுப் போராடியதால், கடுமையான அழுத்தத்தின் விளைவாக 14 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டனர். ஆனால் 5 பேர் மீதுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு 13 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது. கொழும்பு உயர்நீதிமன்றம் 2015 ஜூன் 25 இல் சுனில் ரத்ன நாயகவேவுக்கு மரண தண்டனை விதித்து, மற்ற நான்கு பேரை விடுதலை செய்தது.
கோத்தபாய ராஜபக்சே உத்தரவு
சுனில் ரத்ன நாயகே சிறையில் சுகபோக ஆடம்பர வாழ்க்கை நடத்தினான். அந்தக் கொலைகாரனைத்தான் கோத்தபய ராஜபக்சே விடுதலை செய்திருக்கிறார். பல நாட்டு அரசுகளும், மனித உரிமை அமைப்புகளும் கோத்தபய நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்துள்ளன. அந்த நாட்டு அரசியல் சட்டத்தையும் மதிக்காமல், பாசிச வெறியனான கோத்தபய ராஜபக்சேவின் அரசு நீதியைக் குழிதோண்டிப் புதைத்துள்ளது.
மோடி தலையிட வேண்டும்
தமிழ் இனப் படுகொலை செய்த அனைத்துக் குற்றவாளிகளையும் பாதுகாப்போம் என்று சிங்கள மக்களுக்கு இந்த நடவடிக்கையின் மூலம் அறிவித்துள்ளது. இலங்கையில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துச் சிறுபான்மை மக்களையும் உதாசீனம் செய்கிற சிங்கள பௌத்த மதவாத அரசுதான் தன்னுடைய அரசு என்று அறிவித்துள்ளார். இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் உத்தரவாதமான நடவடிக்கையை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கரம் கூப்பி கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு வைகோ தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.