ஆளும் கட்சிக்குதான் ஆதாயம்.. மக்கள் நல கூட்டணி பாணியில் திமுகவை டீல் செய்கிறாரா வைகோ?
Recommended Video

சென்னை: தான் சார்ந்து இருக்கக்கூடிய கூட்டணிகுள்ளேயே குண்டு வைப்பது என்பது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு வாடிக்கையாகிவிட்டது.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக, மக்கள் மத்தியில் அதிருப்தி அலை வீசியது. அந்த நிலையில் மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளர் போல பிம்பம் செய்து ஒரு கூட்டணியை உருவாக்குவதில் மிகவும் மெனக்கெட்டார் வைகோ.
வைகோவின் தொடர் முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்தது. விஜயகாந்தும் இந்த கூட்டணிக்கு தலைமை தாங்க ஒப்புக்கொண்டார்.

அதிமுகவிற்கு ஆதாயம்
கஷ்டப்பட்டு உருவாக்கிய இந்த கூட்டணியை வெற்றி பெற வைத்திருக்க அல்லவா வைகோ, முயற்சி செய்திருக்கவேண்டும். ஆனால் அப்படி நடந்ததா? இந்த கூட்டணியில் இருந்த பெரும்பாலான கட்சிகள் முற்போக்கு சிந்தனை கொண்டவை. கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்டவை திமுகவின் வாக்குகளை ஈர்க்கத்தான் உதவி செய்ததே தவிர, அதிமுகவை வீழ்த்த இந்த கூட்டணி உதவவில்லை.

பல்டியடித்த வைகோ
அந்த சட்டசபை தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார் வைகோ. ஆனால், தேர்தல் நெருங்கிய நிலையில், திடீரென தனது கட்சியைச் சேர்ந்த விநாயகா ரமேஷ் என்ற பெருவாரியான மக்களுக்கு அறிமுகம் இல்லாத ஒருவரை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்ய வைத்து விட்டு, திடீரென தான் போட்டியிடவில்லை என்று அறிவித்தார்.

கூட்டணிக்குள் குழப்பம்
இதில் கொடுமை என்னவென்றால், மக்கள் நல கூட்டணியில் உள்ள பிற கட்சி தலைவர்களுக்கு கூட, இந்த தகவலை அவர் சொல்லவில்லை. கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக்கொண்டது, மக்கள் நல கூட்டணியின் மீதான அதிருப்தியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. மக்கள் நல கூட்டணியின் மீதான மக்களின் நம்பிக்கையை தகர்க்க செய்தது, வைகோவின் இந்த நடவடிக்கை.

மக்கள் யோசனை
கூட்டணிக்குள்ளேயே ஒற்றுமை இல்லையே.. இவர்களை நம்பி எப்படி வாக்குகளை அளிப்பது என்ற எண்ணத்திற்கு மக்கள் செல்லத் தொடங்கியது வைகோவின் இந்த முடிவால் தான். கூட்டணியில் இருந்த, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் வைகோ தனது முடிவை மாற்ற வேண்டும் என்று கோரியும்கூட அவர் அதை பொருட்படுத்தவில்லை.

திமுக கூட்டணிக்குள்
இதேபோலதான், தற்போது திமுக கூட்டணியில் சேர்ந்து கொண்டு ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்று கூறி வரும் வைகோ, அங்கும் குழப்பத்தை ஆரம்பித்துவிட்டார். தலித்துகளுக்கு திராவிட இயக்கம் சம உரிமை கொடுத்து உள்ளதா என்ற தொலைக்காட்சி நெறியாளர் ஒருவரின் கேள்விக்கு உரிய வகையில் பதில் அளிக்காமல், எங்கள் வீட்டில் வேலைக்கு வைத்திருக்கும் தலித்துகளிடம் நான் சமமாக பழகுகிறேன் என்று சம்பந்தமே இல்லாமல் பேசினார் வைகோ. இதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வன்னியரசு அதற்கு எதிர்ப்பு கருத்தை தெரிவிக்க, அதற்கு பதிலடியாக தேர்தல் செலவுக்கு திருமாவளவனுக்கு 30 லட்சம் ரூபாய்க்கு நான் கொடுத்தேன் என்று பேசியுள்ளார். இவை, அனைத்துமே விடுதலை சிறுத்தைகளின் தன்மானத்தை சீண்டும் செயல்களாகும்.

திமுக கூட்டணி மீது அதிருப்தி
வைகோவின் இந்த செயல்பாடுகள், திமுக கூட்டணியில், எதுவுமே சரியில்லையோ என்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எப்படி மக்கள் நல கூட்டணி குறித்து ஒரு அதிருப்தியை வைகோவின் தேர்தல் முடிவு கொடுத்ததோ, அதே போல இப்போது விடுதலை சிறுத்தைகளுடனான அவரது பேச்சுகளும், போக்குகளும், மக்கள் மத்தியில் திமுக கூட்டணி மீதான அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இப்படி எல்லாம் நடக்கும் என்று திமுக மூத்த தலைவர்களும் அறிந்துதான் வைத்துள்ளனர்.

ரெடியா இருக்கும் திமுக
சில தினங்களுக்கு முன்பு திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா தொலைக்காட்சி டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது, இதைத்தான் குறிப்பிட்டார். மதிமுக, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளன என்று அறிவிப்பதில் அவசரம் கிடையாது. கண்ணுக்கு எட்டும் தூரத்தில் தேர்தல் வரும்போது அது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம். ஒரு ரயில் இஞ்சின் போல் திமுக செயல்படுகிறது. திமுகவால், அவசரப்பட்டு எந்த முடிவையும் அறிவிக்க முடியாது. நிதானமாகத்தான் நாங்கள் கூட்டணி விவகாரத்தை கையாளுவோம் என்றார். பரவாயில்லை.. விஜயகாந்த் பட்ட பாட்டை பார்த்து திமுக தெளிவடைந்து விட்டது. வைகோ அடுத்து என்ன செய்வார் என்பதே இப்போது அரசியலில் பேசு பொருளாக உள்ளது.












Click it and Unblock the Notifications