“இது நாகரிகமா? எனது வரிகளை எடுத்துக்கொண்டு ஒரு வார்த்தையும் கேட்டதில்லை”.. வைரமுத்து ஆதங்கம்!
சென்னை: தனது பாடல் வரிகளின் பல்லவிகளை தமிழ் சினிமா படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது என்றும் அதற்கு தன்னிடம் அனுமதி பெறவில்லை என்றும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்பட தலைப்புகள், பாடல் வரிகளை வைத்து வந்துள்ளன. அந்தவகையில், தனது வரிகளை பட தலைப்புகளாக வைத்தவர்கள் தன்னிடம் மரியாதைக்குக் கூட ஒரு வார்த்தை சொன்னதில்லை என வைரமுத்து கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:
என்னுடைய
பல்லவிகள் பலவற்றைத்
தமிழ்த் திரையுலகம்
படத் தலைப்புகளாகப்
பயன்படுத்தி இருக்கிறது
அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும்
என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு
மரியாதைக்குக்கூட
ஒரு வார்த்தையும் கேட்டதில்லை
ஒன்றா இரண்டா...
பொன்மாலைப் பொழுது,
கண் சிவந்தால் மண் சிவக்கும்,
இளைய நிலா,
ஊரத் தெரிஞ்சுகிட்டேன்,
பனிவிழும் மலர்வனம்,
வெள்ளைப் புறா ஒன்று,
பூவே பூச்சூட வா,
ஈரமான ரோஜாவே,
நிலாவத்தான் கையில புடிச்சேன்,
மெளன ராகம்,
மின்சாரக் கண்ணா,
கண்ணாளனே,
என்னவளே,
உயிரே,
சண்டக்கோழி,
பூவெல்லாம் கேட்டுப் பார்,
தென்மேற்குப் பருவக்காற்று,
விண்ணைத் தாண்டி வருவாயா,
நீ தானே என் பொன் வசந்தம்,
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்,
தங்கமகன்
இப்படி இன்னும் பல...
சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக
இவர்கள் யாரையும்
நான் கடிந்து கொண்டதில்லை
காணும் இடங்களில் கேட்டதுமில்லை
செல்வம் பொதுவுடைமை
ஆகாத சமூகத்தில்
அறிவாவது
பொதுவுடைமை ஆகிறதே
என்று அகமகிழ்வேன்
ஏன் என்னைக் கேட்காமல்
செய்தீர்கள் என்று கேட்பது
எனக்கு நாகரிகம் ஆகாது
ஆனால்
என்னை ஒருவார்த்தை
கேட்டுவிட்டுச் செய்வது
அவர்களின்
நாகரிகம் ஆகாதா?
இவ்வாறு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications