விஜயகாந்துக்காக கருணாநிதியிடம் வாதிட்ட வைரமுத்து! கை நழுவிப் போன கடைசி முயற்சி! ஃபிளாஷ்பேக்!
சென்னை: சென்னை கோயம்பேட்டில் இருந்த விஜயகாந்தின் கல்யாண மண்டபம் இடிபடக் கூடாது என கருணாநிதியிடம் வாதிட்டவர்களில் வைரமுத்துவும் ஒருவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கல்யாண மண்டபம் விவகாரத்தில் வைரமுத்துவின் முயற்சி பலனளிக்கும் என எதிர்பார்த்த விஜயகாந்துக்கு கடைசியில் அந்த முயற்சி கைகூடாததால் ஏமாற்றத்தை அளித்த போதும், தனக்காக கருணாநிதியிடம் வாதிட்டதற்காக வைரமுத்துவை அவர் மறக்கவில்லை. அதேபோல் வைரமுத்து ஏன் ரஜினிகாந்துக்கு மட்டும் தான் பாடல் எழுதுவாரா, இந்த விஜயகந்துக்கு பாடல் எழுத மாட்டாரா என உரிமையுடன் விஜயகாந்த் கேட்ட நிகழ்வும் நடந்ததுண்டு. இது போல் வேறு எந்த நடிகராலும் இப்படி உரிமையாக கேட்க முடியாது.

அந்தளவுக்கு மனதில் தோன்றியதை ஒளிவு மறைவின்றி வைரமுத்துவிடம் பேசக் கூடியவர் விஜயகாந்த். அதேபோல் வைரமுத்துவுக்கு பிடித்த முக்கிய பிரமுகர்களை பற்றிக் கூட அவர்களிடம் உள்ள பிடிக்காத குணங்கள் பற்றி விஜயகாந்த் ஓபனாக பேசியிருக்கிறார்.
விஜயகாந்த் மறைந்து 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் அவர் குறித்த புதுபுதுத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.உயிரோடு ஆக்டிவாக இருந்த வரை அவர் என்னவெல்லாம் செய்தார், யாருக்கெல்லாம் எப்படியெல்லாம் உதவியிருக்கிறார் என்ற தகவல்கள் வெளி வருகின்றன.
அந்த வகையில் சென்னையில் உள்ள மிகப் பெரிய கல்யாண மண்டபங்களில் விஜயகாந்தின் கல்யாண மண்டபமும் ஒன்று என்ற பெயருடன் திகழ்ந்த நிலையில் அது இடிபட்டது தொடர்பான ஆதங்கத்தை தேமுதிகவினர் பகிர்ந்து வருகின்றனர். இந்த திருமண மண்டபத்தை இடிக்கக் கூடாது என விஜயகாந்துக்காக பலரும் கருணாநிதியிடம் வாதிட்ட நிலையில் அதில் வைரமுத்துவும் ஒருவர் என்பது தான் இங்கே குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த் கல்யாண மண்டபத்தை இடிக்காமலேயே பாலம் கட்டியிருக்கலம் என்று இப்போதும் கூட தேமுதிகவினர் கூறி வருகின்றனர். விஜயகாந்த் கல்யாண மண்டபம் இடிக்கப்பட்ட போது மத்தியில் தேசிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக இருந்தவர் டி.ஆர்.பாலு என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த 2 முறை வந்து சென்றவர் டி.ஆர்.பாலு என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications