“சினிமா தந்த புகழை வேறு சந்தைகளுக்கு மடைமாற்றம் செய்யாதவர் ரஜினிகாந்த்”.. வைரமுத்து போட்ட ட்வீட்!
சென்னை: வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்தை கவிதையால் வாழ்த்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து. "சமூகம் அவரைச் சர்ச்சைக்கு இழுத்தாலும் சர்ச்சைகளை அவர் திட்டமிட்டு உண்டாக்குவதில்லை" எனத் தெரிவித்துள்ளார் வைரமுத்து.
1975 ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் ரஜினிகாந்த். தனது தனித்துவமான நடிப்பு மற்றும் ஸ்டைலால் ரசிகர்கள் மனதில் 50 ஆண்டுகளை கடந்து இன்றும் சூப்பஸ்டாராக சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளார்.

திரையுலகில் ரஜினிகாந்த்தின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில், கோவாவில் நடைபெற்ற 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளில், ரஜினிகாந்த்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ள ரஜினிகாந்த்தை திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ஸ்டைலில் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"வாழ்நாள் சாதனையாளர்
விருது பெற்றிருக்கும்
ரஜினி அவர்களை வாழ்த்துகிறோம்
அவரது
தாழாத கீர்த்திக்கும்
வீழாத வெற்றிக்கும்
சில காரணங்கள் உண்டு
அவரது வாழ்வின் முன்னுரிமை
உழைப்புக்கு; பிறகுதான்
மற்றவற்றுக்கு
கலை உலகம் தந்த புகழை
வேறு சந்தைகளுக்கு அவர்
மடைமாற்றம் செய்வதில்லை
ரசிகனுக்கும் தனக்குமுள்ள
நெருக்கம் தூரம் இரண்டுக்கும்
எல்லைகட்டத் தெரியும்
உணவு உடற்பயிற்சி
இரண்டினாலும்
தொப்பையற்ற தோற்றத்தைத்
தொடர்ந்து காப்பாற்றுகிறார்
தான் பின்தங்கிவிடாமல்
மாறும் தலைமுறையோடு
மாறாமல் பயணிக்கிறார்
சமூகம் அவரைச்
சர்ச்சைக்கு இழுத்தாலும்
சர்ச்சைகளை அவர்
திட்டமிட்டு உண்டாக்குவதில்லை
கர்வம் என்பது
தனியறையில் இருந்தாலும்
பணிவு என்பதைப்
பொதுவெளியில் காட்டுகிறார்
'இமயமலை ஆகாமல்
எனதுஉயிர் போகாது
எல்லையைத் தொடும்வரை
எனது கட்டை வேகாது'
என்ற வரிகளை
வாழ்ந்துகாட்டத் துடிக்கிறார்
தான் நன்றாக இருக்கவேண்டும்;
அதுபோல் எல்லாரும்
என்று நினைக்கிறார்
வாழ்க பல்லாண்டு!"
இவ்வாறு வாழ்த்தியுள்ளார் வைரமுத்து.












Click it and Unblock the Notifications