நான் போயிருக்கலாம்.. மகன் இருந்திருக்கலாம்.. வைரமுத்துவிடம் கதறிய ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: நான் போயிருக்கலாம் என் மகன் இருந்திருக்கலாம் என தனது மகனின் இறப்பால் கலங்கியபடியே கவிஞர் வைரமுத்துவிடம் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதை வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இரண்டாவது மகன் திருமகன். இவர் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். தமிழகக் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
இவர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். திருமகன் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல்முறையாக களமிறங்கி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார்.

சட்டசபை நிகழ்வுகள்
தொகுதி பணிகளிலும் சட்டசபை நிகழ்வுகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்றார். பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக முதல்வர் அறிவித்தபோது சட்டசபையில் தனது கன்னி பேச்சின் மூலம் நன்றி தெரிவித்தார் திருமகன். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருமகனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.

ஈரோட்டில் உள்ள மருத்துவமனை
இதையடுத்து ஈரோட்டில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்றைய தினம் மரணமடைந்தார். இதையடுத்து திருமகனின் உடல் ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. மருத்துவமனையிலிருந்து வந்த திருமகனின் உடலை பார்த்து தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் கதறி அழுதார்.

அஞ்சலி
திருமகனின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் ஈரோட்டில் கடையடைப்பை நிகழ்த்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கேஎஸ் அழகிரி, தங்கபாலு, ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்பி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

வைரமுத்து
இந்தநிலையில் கவிஞர் வைரமுத்து, திருமகன் ஈவெராவின் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது வைரமுத்துவை பார்த்ததும் இளங்கோவன் கதறி அழுத காட்சிகள் பார்ப்போரை கண்ணீர் கடலில் ஆழ்த்துகிறது. வைரமுத்துவை பார்த்ததும் கதறிய இளங்கோவன் நான் போயிருக்கலாம், என் திருமகன் இருந்திருக்கலாம் என்றாராம்.

வைரமுத்து ட்வீட்
இதை வைரமுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்வீட்டில் பெரியார் பரம்பரைத்
திருமகன் இறந்தது பேரதிர்ச்சி
நான் போயிருக்கலாம்;
மகன் இருந்திருக்கலாம்
என்றார் இளங்கோவன்
கட்டிய குரலில்
இல்லை; இருவருக்குமே
போகிற வயதில்லை
என்றேன் நான்
மரணம் கண்தெரியாத காற்று
அதற்கு மலர் எது சருகு எது
என்று தெரிவதில்லை
கனத்த மனத்தோடு
கண்ணீர் இரங்கல்
இவ்வாறு வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications