"என்னை தாங்கிபிடித்த தங்கத் தூண் சாய்ந்துவிட்டதே!" ஏவிஎம் சரவணன் மறைவால் கலங்கிய வைரமுத்து!
சென்னை: ஆயிரம் பறவைகளுக்கு கனி கொடுக்க கலை ஆலமரத்தின் கிளை இன்று முறிந்துவிட்டது என ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வந்த ஏவிஎம் சரவணனின் மறைவுக்கு கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வைரமுத்து தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

மதிப்புக்குரிய
ஏவி.எம்.சரவணன்
இயற்கை எய்திவிட்டார்
இன்று
என் அதிகாலையின் இருள்
வடியவே இல்லை
என்னசொல்லிப் புலம்புவது?
44 ஆண்டுகால நட்பு
காலமாகிவிட்டது என்று
கலங்குவேனா?
ஏவி.எம்மின் அடையாளம்
போய்விட்டதே என்று
வருந்துவேனா?
ஆயிரம் பறவைகளுக்குக்
கனி கொடுத்த
கலை ஆலமரத்தின்
கிளை முறிந்ததே என்று
வாடுவேனா?
திரையுலகில்
என்னைத் தாங்கிப்பிடித்த
ஒரு தங்கத் தூண்
சாய்ந்துவிட்டதே என்று
கலங்குவேனா?
கலையுலகில்
எங்களது சந்திப்பு மையம்
வெறிச்சோடிவிட்டதே என்று
விசும்புவேனா?
நண்பர் சகோதரர் வழிகாட்டி
இனி யார் உண்டு என்று
தவிப்பேனா?
தமிழ்த் திரையுலகின்
வரலாறு சொல்லும் ஆசிரியர்
மறைந்துவிட்டாரே என்று
பதைப்பேனா?
புரியவில்லை
எனது மகா ரசிகர்
ஏவி.எம் நிறுவனத்தில்
அதிகமான பாடல்
எழுதிய கவிஞர் என்ற
அருமையான பெருமையை
எனக்களித்தவர்
எல்லாராலும் மதிக்கப்பட்ட
வெள்ளுடை ஆளுமை
கையொடிந்து தவிக்கிறது
இன்று கலையுலகம்
அவரை இழந்துவாடும்
குடும்பத்தார்க்கும்
கலையுலகத்துக்கும்
என் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவிக்கிறேன்
அவர் நினைவுகள்
நீடு வாழும்
என் ஆறாத்துயரம் ஆறுவதற்குக்
காலமே கைகொடு
இவ்வாறு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஏவிஎம் நிறுவனத்தை மெய்யப்ப செட்டியாருக்கு பிறகு அவரது மகன் ஏவிஎம் சரவணன் தொடர்ந்து நடத்தி வந்த நிலையில் வயது மூப்பு காரணமாக தற்போது அவரது மகன் எம்எஸ் குகன் நடத்தி வருகிறார்.
கடந்த இரு ஆண்டுகளாக நடக்க முடியாமல் இருந்த ஏவிஎம் சரவணன், ஒரு மாதத்திற்கு முன்புதான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள வீட்டில் கடந்த ஒரு மாதமாக இருந்தார்.
இந்த நிலையில் அவரது உயிர் இன்று காலை 5.30 மணிக்கு பிரிந்தது. அவரது உடல் அஞ்சலிக்காக, ஏவிஎம் ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரை பிரபலங்கள், நண்பர்கள், ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும் அந்த பந்தா ஏதும் இல்லாமல் பணிவின் சிகரமாகவே சரவணன் இருந்தார் என்கிறார்கள். மேலும் சரவணன் கதையை கேட்டு படங்களை ஒப்புக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றதாகவும் சொல்கிறார்கள். ஏவிஎம் என்றாலே கைகளை கட்டிக் கொண்டு இருக்கும் சரவணன்தான் பலரது நினைவுக்கு வருவார். அப்படிப்பட்டவர் மறைவால் ரசிகர்கள் வேதனையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications