“ஒன்றிரண்டு இடங்கள் கூடக்கொடுத்தும் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும்” - கவிஞர் வைரமுத்து!
சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. எனவே, கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில் கூட்டணி குறித்து கவிஞர் வைரமுத்து கூறியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் கூட்டணி குறித்து பேசியதும், அதற்கு அவர் பாராட்டியதையும் வைரமுத்து நினைவு கூர்ந்திருக்கிறார். இத குறித்து அவர் தனது x பக்கத்தில் பகிர்ந்திருப்பதாவது,

"சென்னை
ஏவி.எம்.ராஜேஸ்வரி
திருமண மண்டபம்
திருக்குறள் கலைஞர் உரை
வெளியீட்டு விழா
கலைஞரும் மூப்பனாரும்
கூட்டணிக்கு
நெருங்கி வந்துகொண்டிருந்த
நேரம்.
இருவரும் மேடையில்;
நானும் ஒரு பேச்சாளன்
என் பெயர் அறிவிக்கப்பட்டதும்
கலைஞர்
என் காதுக்குள் சொல்கிறார்:
"கூட்டணிக்குப் பொருத்தமாய்க்
குறள் இருக்கிறதா?
குறிப்பிடுங்களேன்"
பேசிக்கொண்டே
யோசித்துக் கண்டுபிடித்தேன்
'நல்ல குடியில் பிறந்து
பழிச்செயலுக்கு நாணுகிறவனோடு
ஒன்றிரண்டு இடங்கள்
கூடக்கொடுத்தும்
கூட்டணி வைத்துக்கொள்ள
வேண்டும்' என்ற பொருளில்
வள்ளுவர் வாக்கு ஒன்று
வழக்கில் இருக்கிறது என்றேன்
"குடிப்பிறந்து தன்கண்
பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு"
என்ற குறளுக்கிணங்க
கலைஞரும் மூப்பனாரும்
கூட்டணி கொண்டிருக்கிறார்கள்
என்று குறிப்பிட்டேன்
என்னைப் பார்த்துக் கலைஞர்
புன்னகை செய்தார்
அந்தப் புன்னகை
அது சிந்தப்பட்ட
சீதோஷ்ணத்திலேயே
இதயத்துக்குள்
இன்னும் இருக்கிறது இதமாக
குறள் மாறவில்லை;
கூட்டணியும் மாறக்கூடாது.
தொடரவேண்டும் என்பது
நடுநிலையாளர்களின் வேட்கை
மற்றும் நம்பிக்கை
தலைமை ஆசிரியரும்
வகுப்பாசிரியரும்
'கை'குலுக்கிக்கொண்டே
வகுப்புக்குள் நுழைந்தால்
பிள்ளைகளின்
பேச்சரவம் நின்றுவிடும்"
என கவிஞர் வைரமுத்து தனது x பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். 'நல்ல குடியில் பிறந்து பழிச்செயலுக்கு நாணுகிறவனோடு ஒன்றிரண்டு இடங்கள் கூடக்கொடுத்தும்
கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும்' என்று அவர் கூறியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications