தவெக மாநாட்டுக்கு அழைத்துச் சென்ற வேன் டிரைவர்களுக்கு பணம் தராமல் கொலை மிரட்டல் விடுத்த நிர்வாகிகள்!
சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு தவெக தொண்டர்களை அழைத்துச் சென்ற வேன் ஓட்டுநர்களுக்கு பணம் தராமல், தவெக நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுப்பதாக சென்னையைச் சேர்ந்த வேன் டிரைவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வி்க்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்தும் தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் படையெடுத்தனர். வாடகை பேருந்துகள், வாடகை வேன்களில் வந்து லட்சக்கணக்கானோர் தவெக மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய், முதன் முதலாக அரசியல் உரை ஆற்றினார். மாநாட்டில் விஜய்யின் பேச்சு அரசியல் அரங்கில் விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு தொண்டர்களை அழைத்து வந்த வேன் ஓட்டுநர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையைச் சேர்ந்த சக்திவேல், மணிகண்டன் ஆகிய வேன் ஓட்டுநர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளனர். அதில், "நாங்கள் ஆக்டிங் ஓட்டுநர்களாகப் பணியாற்றி வருகிறோம். தமிழக வெற்றிக் கழகத்தின் அபிராமபுரம் பகுதி துணைச் செயலாளர் மோகன் என்பவர் எங்களை அணுகி தவெக மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறினார்.
சம்பளத்தொகை பேசிவிட்டுச் சென்றோம். 27 ஆம் தேதி தொண்டர்களை அழைத்துக் கொண்டு மாநாட்டிற்கு செல்லும் போதே வாகனத்திற்குள் தொண்டர்கள் மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டனர். பிறகு அவர்களை நாங்கள் மாநாட்டில் இறக்கி விட்டோம். ஆனால் தவெக நிர்வாகி மோகன் கூறியபடி எங்களுக்கு சாப்பாடு எதுவும் வாங்கித் தரவில்லை.
மாநாடு முடிந்து அனைவரையும் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வந்தோம். அதன் பிறகு மோகன், தான் கூறிய படி சம்பள தொகையை இதுவரை எங்களுக்கு தரவில்லை. பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் ஆட்களை வைத்து தாக்க முயன்றார். தவெகவைச் சேர்ந்த சுதாகர் என்பவர் எங்களை ஆபாசமாக திட்டி விரட்டினார்.
இது குறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பளம் கேட்டதற்காக எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மோகன், சுதாகர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
போலீசில் புகார் அளித்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிரைவர் மணிகண்டன், "டிரைவராக நான் வேலை பார்த்ததற்கு சம்பளம் கொடுக்காததால் இன்று வரை பிச்சைக்காரன் போல அலைந்து திரிகிறேன். நாயே.. யாரைக் கேட்டு ஆபீசுக்கு வந்த என மிரட்டுகிறார்கள்." எனக் குற்றம்சாட்டினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள சூழலில், அந்த மாநாட்டுக்கு தொண்டர்களை அழைத்துச் சென்ற ஆக்டிங் டிரைவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் தவெக நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்தது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.












Click it and Unblock the Notifications