ஊழல் அமைச்சர்கள் தப்பி விட கூடாது.. ஆட்சியை காப்பாற்ற ’நாகரிக அரசியல்’ பயணம்? விஜய்யை விளாசிய வானதி!
சென்னை: ஊழல்வாதிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் புதிய கட்சியை தமிழக மக்கள் ஆட்சியில் அமர்த்தியுள்ளனர் எனவும், முதலமைச்சர் ஜோசப் விஜயின் 'நாகரிக சந்திப்பு' ஊழல் முன்னாள் அமைச்சர்களை காப்பாற்றி விடக்கூடாது என பாஜக தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு கட்சித் தலைவர்களை திரு. விஜய் அவர்கள் நேரில் சந்தித்தார். ஆட்சி அமைத்த பின், தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கட்சித் தலைவர்களை சந்திப்பது பாராட்டுக்குரியது.

அதே நேரத்தில், அனைத்து முக்கிய கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்காமல், தேர்வு செய்து, குறிப்பிட்ட சிலரை மட்டுமே சந்தித்துள்ளார். அரசியல் களத்தில் நேர் எதிராக நிற்பவர்களையும், சித்தாந்த ரீதியாக எதிர் துருவத்தில் இருப்பவர்களையும் சந்திப்பதே அரசியல் நாகரிகம்.
வானதி சீனிவாசன்
பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியைத் தக்க வைக்கவே, இந்த 'நாகரிக அரசியல் பயணம்' என்ற விமர்சனத்தையும் புறந்தள்ளி விட முடியாது. முந்தைய விஜய் அரசு மீதும், அமைச்சர்களாக இருந்த பலர் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. திமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தித் தான் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்துள்ளது.
விஜய் அரசு
திமுக ஆட்சியின் வீழ்ச்சிக்கு ஊழலும், சட்ட ஒழுங்கு சீரழிவும் தான் முக்கிய காரணம். திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலர் மீது, ஊழல் செய்ததற்கான ஆதாரங்களுடன் வழக்கு பதிவு செய்யுமாறு, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர், தலைமைச் செயலாளருக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது. ஆனாலும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 'நாகரிக சந்திப்பு', ஊழல் வழக்குகளில் இருந்து, திமுக முன்னாள் அமைச்சர்களை காப்பாற்றி விடக் கூடாது.
திமுக ஊழல்
எந்தெந்த துறைகளில் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதோ, அது குறித்து முறையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும். ஊழல்வாதிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் புதிய கட்சியை தமிழக மக்கள் ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். எனவே, ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிவிடக் கூடாது. இதை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் உறுதி செய்ய வேண்டும்" என கூறியுள்ளார்.
முதலமைச்சர் விஜய்
சட்டப் பேரவையில் எம்.எல்.ஏ.,வாக பதவியேற்ற முதலமைச்சர் விஜய், பேரவை முடிந்ததும், சென்னையில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் இல்லங்களுக்குச் சென்று வாழ்த்து பெற்றார். முதலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, அவரது ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்துக்குச் சென்று சந்தித்தார். ஸ்டாலினைத் தொடர்ந்து, சென்னை அண்ணா நகருக்குச் சென்ற முதலமைச்சர் விஜய், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
நாகரிக அரசியல்
பா.ம.க. தலைவர் அன்புமணியை, சென்னை அக்கரையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று விஜய் சந்தித்தார். அவரை அன்புமணியும் அவரது மனைவி செளமியா அன்புமணியும் வரவேற்று வாழ்த்தினர். ஸ்டாலின், வைகோ, அன்புமணியைத் தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் சந்தித்து விஜய் வாழ்த்து பெற்றார். விஜயை ஆரத்தழுவி வரவேற்ற சீமான், பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications