Vande Bharat: தீபாவளி பரிசு வெயிட்டிங்.. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலா? பயணிகளுக்கு சர்ப்ரைஸ்! எந்த ரூட் தெரியுமா?
சென்னை: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலுக்கான (Vande Bharat Sleeper Train) சோதனை ஓட்டம் முடிந்து பல மாதங்கள் ஆனாலும் கூட தற்போது வரை ரயில் இயக்கப்படவில்லை. இதனால், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது முதல் இயக்கப்படும்? எந்த ரூட்டில் இயக்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு பயணிகள் இடையே நிலவிய நிலையில், தற்போது அதுகுறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் இந்த ரயில் சேவை தொடங்கப்படும் என்று ரயில்வே வட்டார தகவல்கள் கூறுகின்றன
இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. வழக்கமாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களுடன் ஒப்பிடும் போது முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்புடன் இந்த ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. வெளிப்புற தோற்றம், பயணிகளுக்கான வசதிகள் என அனைத்திலும் ஹைடெக் வசதிகளுடன் இந்த ரயில் அறிமுகம் செய்யப்பட்டது.

தமிழகத்திலும் வந்தே பாரத் ரயில்கள்
டெல்லி - வாரணாசி வழித்தடத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் நாடு முழுவதும் படிப்படியாக பல்வேறு ரூட்டுகளில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தமிழகத்திலும் சென்னை - நெல்லை, சென்னை - நாகர்கோவில், சென்னை - பெங்களூர், கோவை - பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
முழுவதும் ஏசி வசதி, சொகுசு இருக்கைகள், தானியங்கி கதவுகள், அடுத்து வர இருக்கும் ரயில் நிலையம் பற்றிய முன்னறிவிப்பு, விசாலமான ஜன்னல்கள், பயோ டாய்லெட் என சகல வசதிகளும் வந்தே பாரத் ரயில்களில் உள்ளதால் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதேபோல அதிவேகத்துடன் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் இந்த ரயில்களில் விரும்பி பயணிக்கிறார்கள்.
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்
தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் அனைத்தும் இருக்கை வசதி கொண்ட ரயில்களாகும். எனவே தொலை தூர பயணங்களுக்கு ஏற்ற வகையிலும் இரவு நேர பயணத்திற்கு தகுந்தபடியாகவும் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. இதையடுத்து, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்தது.
என்னென்ன வசதிகள் உள்ளன?
இதன்படி, பெங்களூரில் உள்ள BEML நிறுவனத்தில், முதல் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள் கடந்த வருடம் துவங்கி, தயாரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் மூன்று அடுக்கு படுக்கைகள், சிசிடிவி கேமராக்கள், எல்.இ.டி ஸ்கிரீன்கள், சென்சார்கள், தானியங்கி தீ அலர்ட் கருவி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளும் உள்ளன.
இந்த பெட்டிகளை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்திருந்தார். இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டமும் முடிந்துவிட்டது. எனினும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது பயணிகள் பயன்பாட்டுக்கு வரும் என்பது பற்றி ரயில்வே எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
தீபாவளி முதல் இயக்கப்படும்
ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயிலின் சோதனை நடந்து முடிந்த 6 மாதங்களாகிவிட்ட நிலையில், இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பது பயணிகளுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில்தான், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வரும் தீபாவளிக்கு முன்பாக இயக்கப்படலாம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து பிரயாக்ராஜ் வழியாக பீகார் தலைநகர் பாட்னா அல்லது இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
டிக்கெட் கட்டணம் எவ்வளவு இருக்கும்?
தற்போது இதே வழித்தடத்தில் இயக்கப்படும் ராஜ்தானி சொகுசு ரயிலின் கட்டணத்தை விட 10 - 15 சதவீதம் டிக்கெட் கட்டணம் கூடுதலாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. டெல்லி - பாட்னாவுக்கு தற்போது ரயிலில் சென்றால் 12-17 மணி நேரம் வரை ஆகும் நிலையில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் 11.05 மணி நேரத்தில் இலக்கை அடைந்துவிடும் என்று ரயில்வே வட்டார தகவல்கள் கூறுகின்றன.
அதிகபட்சம் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடியது. தீபாவளிக்கு முன்பாக இந்த ரயில் சேவை தொடங்கப்படும் என்றும், அதாவது செப்டம்பர் கடைசி வாரத்தில் துவங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications