போடு வெடியை.. சென்னை வழியாக திருப்பதிக்கு வந்தே பாரத் ரயில்! தேதி குறித்த மத்திய அரசு
சென்னை: புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரவும், அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த முயற்சியின் ஒரு பகுதியாக புதுச்சேரியிலிருந்து சென்னை வழியாக திருப்பதிக்கு வந்தே பாரத் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு புதுப்பொலிவுடன் இருந்து வருகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கும் இந்தியன் ரயில்வே ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இந்நிலையில் ரயில் சேவையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல சமீபத்தில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த ரயில் முக்கிய நகரங்களை இணைக்கும். அதேபோல அதிவேகம் மற்றும் நவீன வசதிகளை கொண்டிருப்பதால் மக்கள் மத்தியில் இந்த ரயில் சேவைக்கு பெரும் வரவேற்பு இருந்தது. முதன் முதலாக டெல்லியிலிருந்து 759 கி.மீ தொலைவில் உள்ள உத்தரப் பிரதேசத்தின் வாரணாசிக்கு இயக்கப்பட்டது. மொத்தம் 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் இருக்கை வசதி மட்டுமே இருக்கும். எடை குறைவான இந்த ரயில் கவாச் ரயில் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ரயில் இயக்கப்பட்டதால் அதேபோல மிகுந்த வரவேற்பையும் பெற்றிருக்கிறது. அதிகபட்சமாக 180 கி.மீ வேகத்தில் இயங்கும் இந்த ரயில் சில குறிப்பிட்ட நிறுத்தத்தில் மட்டுமே நின்று செல்லும். இதனையடுத்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு இந்த வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டை பொறுத்த அளவில் தற்போது சென்னை டூ மைசூர் வரையும், சென்னை டூ கோவை வரையும் இயக்கப்படுகிறது. இதேபோல சென்னை டூ நெல்லை வரை விரைவில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் மற்றொரு தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது புதுச்சேரியிலிருந்து சென்னை வழியாக திருப்பதிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. புதுவை வந்தே பாரத் ரயில் எனும் பெயரில் இந்த ரயில் இயக்கப்பட இருக்கிறது. புதுவையிலிருந்து விழுப்புரம், மதுராந்தகம் வழியாக சென்னை வரும் இந்த ரயில், சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக திருப்பதி செல்லும். இந்த ரயில் 2024ம் ஆண்டு பிப்ரவரியில் இயக்கப்படும் என சொல்லப்படுகிறது.

பொதுவாக புதுச்சேரியிலிருந்து திருப்பதி போக வேண்டும் எனில் அங்கிருந்து விழுப்புரம் திருவண்ணாமலை வழியாக வேலூர் வந்து, அதன் பின்னர்தான் திருப்பதி போக வேண்டும். ஆனால் புதுச்சேரியிலிருந்து திருவண்ணாமலைக்கும், வேலூருக்கும் குறிப்பிட்ட நேரத்தில்தான் ரயில் இருக்கும். இந்த பாதை விரிவு படுத்தப்பட வேண்டும் என்று வேலூர், திருவண்ணாமலை மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை இந்த பாதை விரிவுபடுத்தப்படாமல் இருக்கிறது.
இந்த நிலையில்தான் வந்தே பாரத் ரயில் தொடர்பாக தகவல் வெளியானது. இருப்பினும் இந்த ரயில் திருவண்ணாமலை வழியாக அல்லாமல் சென்னை வழியாக இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருப்பது இந்த இரு மாவட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications