அதிகார குரலுக்கு அடிபணியாதவர்! அதிமுக அரசை அலறவிட்டவர்! யார் இந்த வந்திதா பாண்டே ஐபிஎஸ்?
சென்னை: அதிமுக ஆட்சியில் ஓரங்கட்டப்பட்டு இருக்கும் இடம் தெரியாமல் வைக்கப்பட்டிருந்த வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். இப்போது புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இளம் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான வந்திதா பாண்டே அதிகார குரலுக்கு அடிபணியாதவர் என்பதும் ஒரு காலத்தில் அதிமுக அரசையே அலறவிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆம், 2016 சட்டமன்றத் தேர்தலின் போது கரூர் எஸ்.பி.யாக இருந்த வந்திதா பாண்டே, கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடியை மடக்கிப்பிடித்து ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருந்தவர்களை தண்ணீர் குடிக்க வைத்தார்.

வந்திதா பாண்டே
உத்திரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத்தை சேர்ந்த வந்திதா பாண்டே கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக ஐ.பி.எஸ். கேடராக தேர்வானார். பயிற்சிக்கால முடிவடைந்த பிறகு 2013-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஏ.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்த வந்திதா பாண்டே ஐ.பி.எஸ்., 2014-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்ட ஏ.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். அந்தக் காலக்கட்டத்தில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகள் மூலம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

சிவகங்கை மாவட்டம்
மேலும், அதுமட்டுமின்றி சிறுமி பாலியல் வன்கொடுமை நிகழ்வில் தொடர்புடைய அனைவர் மீதும் பல எதிர்ப்புகளை மீறி மிக துணிச்சலுடன் நடவடிக்கை எடுத்தார் வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். இதையடுத்து 2015-ஆம் ஆண்டு கரூர் மாவட்ட எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றுச் சென்றார். அங்கும் தனது அதிரடிகளை தொடர்ந்தார். வந்திதா பாண்டே காட்டிய அதிரடியால் அப்போதைய ஆளுங்கட்சி பிரமுகர்கள் அவர் மீது ஏக கோபத்தில் இருந்தனர். ஆனாலும் இதற்கெல்லாம் சளைக்காமல் தனது அதிரடிகளை கரூர் மாவட்டத்தில் தொடர்ந்தார் இந்த இளம் ஐ.பி.எஸ். அதிகாரி.

கண்டெய்னர் லாரி
2016 சட்டமன்றத் தேர்தலின் போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே ரூ.570 கோடியுடன் கண்டெய்னர் லாரி ஒன்று பிடிபட்ட சில நிமிடங்களில் எங்கெங்கிருந்தோ வந்த அலைபேசி அழைப்புகளை புறந்தள்ளி அதனை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் வேறு யாருமில்லை, இந்த வந்திதா பாண்டே ஐ.ஏ.எஸ்.தான். அதிமுக ஆட்சியில் அதிகாரத்தின் உச்சியில் இருந்தவர்கள் இதனால் ஆத்திரப்பட்டு இவரை மாற்றியடித்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து கருணாநிதியே ஒரு அறிக்கைக் கூட வெளியிட்டார். அதுமட்டுமல்ல அன்றைக்கு மு.க.ஸ்டாலினும் வந்திதா பாண்டே இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம்
இதனிடையே மீண்டும் 2016-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு வந்திதா பாண்டே டம்மி பதவிகளுக்கு தூக்கியடிக்கப்பட்டார். ஆவடி போலீஸ் பட்டாளியன், மதுவிலக்கு அமலாக்கத்துறை, பொருளாதார குற்றப்பிரிவு என ஓரங்கட்டப்பட்டு வந்த வந்திதா பாண்டே ஐ.பி.எஸ்., திமுக ஆட்சி அமைந்த தருணத்தில் மக்ப்பேறு விடுப்பில் சென்றுவிட்டார். அண்மையில் மீண்டும் பணியில் இணைந்த இவருக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பை வழங்கியுள்ளது திமுக அரசு.

கணவர் ஐ.பி.எஸ்.
வந்திதா பாண்டேவின் கணவர் வருண் குமாரும் ஐ.பி.எஸ். அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது மதுரையில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது கூடுதல் தகவலாகும்.












Click it and Unblock the Notifications