"நயவஞ்சக எடப்பாடி".. அதிமுக - பாஜகவின் பிரிவின் பின்னணி! இஸ்லாமிய இயக்கங்களை எச்சரிக்கும் வன்னியரசு
சென்னை: இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அதிமுக நயவஞ்சகம் செய்து வருவதாகவும், இஸ்லாமிய இயக்கங்களை குழப்புவதே அதிமுக மற்றும் பாஜகவின் செயல்திட்டம் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் பல ஆண்டுகால கோரிக்கையாக உள்ளது. இது தொடர்பாக அதிமுக கடந்த வாரம் தமிழ்நாடு சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. ஏற்கனவே பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டதற்காக அதிமுகவுக்கு வரவேற்பு தெரிவித்த இஸ்லாமிய கட்சிகளின் தலைவர்கள், இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்ததற்காக நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள வன்னியரசு, "எச்சரிக்கை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்ததன் நயவஞ்சக பின்னணி என்ன என்பதை இப்போது புரிந்து கொள்ளலாம்.
அதிமுக நயவஞ்சகம்-1: சட்டப்பேரவையில் இசுலாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்து திரு.எடப்பாடி பழனிசாமி பேசினார். ஆனால், அதிமுக ஆட்சி காலத்திலோ அல்லது எடப்பாடியார் ஆட்சி காலத்திலேயோ இசுலாமிய சிறைவாசிகள் குறித்து அக்கறைப்பட்டதில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய பட்டியல் தயாரித்து ஆளுனருக்கு முதல்வர் முக ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.
ஆளுனர் திரு.ரவி அவர்கள் இசுலாமிய சிறை வாசிகளை விடுவிக்க மறுத்து விட்டார். அதிமுகவுக்கு இசுலாமிய சிறைவாசிகள் குறித்து உண்மையான அக்கறை இருந்தால், ஆளுனருக்கு எதிரான போராட்டத்தை நடத்தி இருக்க வேண்டும். அதை விடுத்து, பாஜகவின் நயவஞ்சக செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் இசுலாமியர்களுக்கு ஆதரவாக பேசுவது போல நடித்து வருகிறார்.
அதிமுக நயவஞ்சகம்-2: வேலூரில் உள்ள வழிபாட்டுத் தலமான மசூதியை திறக்கக் கோரி திரு.எடப்பாடியார் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், அதிமுக ஆட்சியில் இருந்த 2020 நவம்பர் மாதமே சிறையில் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டுள்ளன. அதாவது, எடப்பாடியார் தான் வழிபாட்டுத் தலங்களை மூடியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பின் இப்போது திறக்க வேண்டும் என அறிக்கை தருகிறார். அதாவது, வழிபாட்டுத் தலங்களை மூடிய எடப்பாடியாரே இப்போது திறக்கச் சொல்லுகிறார். இது தான் அதிமுகவின் நயவஞ்சகமாகும்.
எதற்காக பாஜகவுடன் முறிவு?: பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு
இந்த கோரிக்கைகளை எழுப்பினால், நம்பகத்தன்மை இருக்காது என்பதால் வெளியே வந்து எழுப்புகிறார் எடப்பாடியார். இது இசுலாமிய இயக்கங்களிடையே குழப்பங்களை உருவாக்கவே பயன்படும். அதற்கான செயல்திட்டமே அதிமுக - பாஜக பிரிவு என்பதை மீண்டும் புரிந்து கொள்ளலாம். இசுலாமிய இயக்கங்கள் எச்சரிக்கையோடு கவனிக்க வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications