விடுதலைச் சிறுத்தைகளின் மனித சங்கிலிக்கு தடை ஏன்?.. ஆர்எஸ்எஸ்ஸும் நாங்களும் ஒன்றல்ல.. வன்னியரசு
சென்னை: ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஊர்வலத்தோடு விசிக பேரணிக்கும் அனுமதி மறுத்துள்ள தமிழக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது என விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வன்னியரசு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடை விதித்ததற்கு விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறோம். இது ஆளுமையுள்ள முடிவு. தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆர்எஸ்எஸ் இயக்கம் என்பது ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதை 1948 பிப்ரவரி 4ஆம் தேதி காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட போது அதை சொல்லிதான் தடை செய்தார்கள். 1985 ஆம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி இருந்த போது இந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் இந்தியாவின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படும், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவார்கள் என தடை செய்யப்பட்டது.

பாபர் மசூதி இடிப்பு
அது போல் 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தின் போது குற்றச்செயல்களை செய்கின்றன, பயங்கரவாத செயல்களை செய்கின்றன, தீவிரவாத செயல்களை செய்கிறது என்ற குற்றம் சுமத்திதான் அந்த இயக்கம் தடை செய்யப்பட்டது. எனவே ஆர்எஸ்எஸ் இயக்கம் இதுவரை 3 முறை தடை செய்யப்பட்ட இயக்கமாகும்.

தீவைத்து கொளுத்திய சம்பவம்
இப்படிப்பட்ட இந்த இயக்கம் வடமாநிலங்களான ஜார்க்கண்ட், அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இதே போல் அணிவகுப்பு நடத்திய போது இஸ்லாமிய குடியிருப்புகள், பள்ளிவாசல்கள், கிறிஸ்துவ தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டு தீவைத்து கொளுத்தப்பட்டன. இது போல் பல சம்பவங்களை உதாரணம் காட்ட முடியும்.

ஆளுயர கைத்தடி
அணிவகுப்பு என்ற பெயரில் ஆளுயர கைத்தடியையும் ஆயுதங்களையும் வைத்துக் கொண்டு ஊர்வலம் செல்வது என்பது இந்தியாவினுடைய அமைதிக்கும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது என்ற அடிப்படையில்தான் இந்த அணிவகுப்பிற்கு எதிர்க்கும் தடை செய்ய வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

சமூக நல்லிணக்க அமைதி சங்கிலி
அதே அக்டோபர் 2 ஆம் தேதி சமூக நல்லிணக்க அமைதி சங்கிலி என்கிற பெயரில் விசிக சார்பில் நடத்துகிறோம். அதற்கும் சேர்த்து தடை விதித்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துகிற இந்த அமைதி சங்கிலிக்கு தமிழக அரசு அனுமதி தர வேண்டும். அமைதியையும் சமத்துவத்தையும் சமூகநீதியை வலியுறுத்துவது என்ற அடிப்படையில்தான் இந்த மனித சங்கிலியை நாங்கள் நடத்துகிறோம்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு
எனவே தமிழக அரசு ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்தையும் விசிக சங்கிலியையும் பொருத்தி பார்க்கக் கூடாது. ஆர்எஸ்எஸ் அமைப்பு தீவிரவாத அமைப்பாகும். இடதுசாரிகள், நாம் தமிழர் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சியுடன் நாங்கள் இணைந்து நடத்தும் மனித சங்கிலியும் ஆர்எஸ்எஸ் ஊர்வலமும் ஒன்றல்ல.

மனித சங்கிலிக்கு அனுமதி தர வேண்டும்
எனவே தமிழக அரசு இந்த மனித சங்கிலியை நடத்துவதற்கு அனுமதி தர வேண்டும். அதே வேளையில் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு தடை விதிப்பதை நாங்கள் வரவேற்கிறோம். பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் அசாதாரண சூழல் உள்ளது. ஆனால் இதுவரை எங்கும் வன்முறையோ கலவரமோ ஏற்படவில்லை. ஆனால் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தினால் அது போன்ற பிரச்சினை ஏற்படும் என அரசு காரணம் காட்டியுள்ளது நியாயமானது. அந்த அமைப்பை முழுக்க தடை செய்யப்பட வேண்டிய ஒரு இயக்கம்.

மனித சங்கிலி எதற்காக
ஆனால் மனித சங்கிலி என்பது சமூகநல்லிணக்கம், அமைதி வளர்த்தெடுப்பது, தமிழகத்தில் மதவாத ஜாதிய சனாதன சக்திகள் நிலைநிறுத்திவிட கூடாது, கால் ஊன்றிவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாங்கள் மனித சங்கிலியை நடத்துகிறோம். எனவே இந்த அமைப்பின் ஊர்வலத்தையும் எங்கள் சங்கிலியையும் ஒன்றாக பார்க்கக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications