இட ஒதுக்கீடு என்னாச்சு? வன்னியர் வளர்ந்தால் மொத்த தமிழ்நாடே வளரும்! விழுப்புரத்தில் அன்புமணி பேச்சு!
விழுப்புரம்: தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமுதாயமாக வன்னியர் சமுதாயம் உள்ளது எனவும், வன்னியர் சமுதாயம் வளர்ந்தால் தான் ஒட்டுமொத்த தமிழ்நாடு வளரும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு கொடுப்பதாக சொன்ன முதலமைச்சர் ஏன் அதனை நிறைவேற்றவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாட்கள் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபயணம் மேற்கொண்டார்.
பின்னர் பேசிய அவர்," இந்த விக்கிரவாண்டி மண் சமூக நீதி மண். டாக்டர் ராமதாஸ் இருக்கின்ற மண். சமூக நீதி போராட்டத்திற்காக 21 பேர் உயிர் நீத்த மண். 1987 இட ஒதுக்கீடு போராட்டத்தில் இந்த மண்ணை சேர்ந்த பல தியாகிகள் உயிரை இழந்தனர்.

திமுக அரசு
கடந்த மூன்று தேர்தல்களில் திமுகவை தமிழக மக்கள் வெற்றி பெற வைத்தீர்கள். ஆனால் தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. சந்துக்கடைகளில் டாஸ்மாக் விற்பனை அதிகரித்துவிட்டது. குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை நடமாட முடியவில்லை பாலியல் தொல்லை அதிகரித்து விட்டது. தயவுசெய்து 2026 இல் மீண்டும் திமுகவை வெற்றிபெற வைக்காதீர்கள்.. துப்புரவு பணியாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் திமுக ஆட்சியில் கடும் விரக்தியில் இருக்கிறார்கள்.
தூய்மை பணியாளர்கள் போராட்டம்
சென்னையில் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 15 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்கள். அந்தப் பணியை தற்போது தனியார் மயமாக மாநகராட்சி முயற்சி செய்கிறது. இவர்கள் துப்புரவு பணியை மேற்கொள்ளவில்லை என்றால் சென்னை சுத்தமாக இருக்குமா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் துப்புரவு பணியாளர்களை பணியை நிரந்தரப்படுத்துவோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தனர். துப்புரவு பணியாளர்களின் பிரச்சனை மட்டும் கிடையாது நம் அனைவரின் பிரச்சனை.
15% ஒதுக்கீடு
வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு கொடுப்பதாக சொன்ன முதலமைச்சர் ஏன் அதனை நிறைவேற்றவில்லை. 2019-ல் இதே இடத்தில் அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வன்னியர்களுக்கு 15 விழுக்காடு இட ஒதுக்கீடு தனியாக நாங்கள் கொடுப்போம் என்று மு க ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். அன்று கொடுத்த வாக்குறுதியை இன்று முதலமைச்சர் ஆன நீங்கள் ஏன் நிறைவேற்றவில்லை? இது வன்னியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை கிடையாது. தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமுதாயமாக வன்னியர் சமுதாயம் உள்ளது
வன்னியர் இடஒதுக்கீடு
வன்னியர் சமுதாயம் வளந்தால் தான் ஒட்டுமொத்த தமிழ்நாடு வளரும். இந்த இட ஒதுக்கீட்டிற்காக தானே 21 ஜாதிகள் இந்த மண்ணில் உயிரை விட்டார்கள். உச்ச நீதிமன்றம் சொல்லியும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடை கொடுக்க தமிழக அரசு முன்வரவில்லை. கடைசியாக உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு கொடுத்தது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் இல்லை ஆனால் அந்த இட ஒதுக்கீடை கொடுப்பதற்கான தரவுகளை எடுத்து அந்த அடிப்படையில் கொடுங்கள் என உச்சநீதிமன்றம் சொல்லியது... ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு நிறைவேற்ற வில்லை.
அரசியல் விமர்சனம்
திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்தை வழங்கியது ஏ.கோவிந்தசாமி என்ற வன்னியர்... அந்த சமுதாயத்திற்கு திமுக துரோகம் செய்து வருகிறது. அந்த சின்னத்தை வழங்கியவருக்கும் திமுக ஒன்றும் செய்யவில்லை.. கர்நாடகத்தில் 35 நாட்களில் நடந்தது.. தமிழ்நாட்டில் 30 மாதங்களில் கூட நடைபெறாதது ஏன்?. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் வேலையை செய்ய விடாமல் தமிழக அரசு தடுக்கிறது வேண்டுமென்றே கால நீட்டிப்பு செய்து கொண்டே இருக்கிறது.
பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தனக்கு உரிய வேலையை செய்ய மறுக்கிறது. இன்னும் சொல்லப்போனால் செய்யவிடாமல் தடுக்கிறார்கள். அந்த ஆணையத்தின் தலைவராக இருப்பவர் ஓய்வு பெற்ற நீதிபதி. அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். ஆனால் அவரது பணியை செய்ய விடாமல் தடுக்கிறார்கள். 6 மாதம் 6 மாதம் என்று காலக்கெடுவை நீட்டித்துக் கொண்டே செல்கிறார்கள். 30 மாதங்களாக இந்த ஆணையம் செய்த பணி என்ன என்பதை விளக்க வேண்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications