ஸ்டாலினின் முடிவு.. வரவேற்ற அண்ணாமலை - எதிர்க்கும் வன்னியரசு! கோவை சம்பவம்.. என்ஐஏ விசாரணை தேவையா?
சென்னை: கோவை சிலிண்டர் கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றும் முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரைத்து உள்ள நிலையில் இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை, உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கை தனிப்படை அமைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு 5 பேரை கைது செய்து இருக்கிறது.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணையை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற பரிந்துரைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

ஆய்வுக்கூட்டம்
இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பில், "கோவை, உக்கடம் பகுதியில் 23-10-2022 அன்று நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், பொதுவான சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று (26-10-2022) தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மேற்படி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

என்.ஐ.ஏக்கு மாற்றம்
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்தும், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்திடவும் மாண்புமிகு முதலமைச்சர் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால் இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வன்னியரசு எதிர்ப்பு
இதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்து இருக்கும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "கோவை சிலிண்டர் வெடிப்பு சம்மந்தமாக தமிழ்நாடு காவல்துறை விசாரணை மற்றும் நடவடிக்கைகள் சரியான திசை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. தேசிய புலனாய்வு முகமை விசாரணை என்பது மாநில உரிமைகளை பறிப்பதாகும். இதை வைத்து வழக்கம்போல, பாஜகவின் வெறுப்பரசியலுக்கு என்.ஐ.ஏ. உதவுமே தவிர வேறொன்றும் இல்லை." என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications