பட்டா பெயர் மாற்றம்.. அரசு அலுவலகங்களில் அசிங்கமாக சிக்கும் அதிகாரிகள்.. சென்னை அருகே விஏஓ கைது
சென்னை: பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு இன்னும்சில அரசு அலுவலகங்களில் லஞ்சம்கேட்பது தொடர்கிறது.. என்ன தான் அரசு ஆன்லைனில் அனைத்து சேவைகளையும் மாற்றினாலும், வேலையை செய்வதற்கோ, வேலை முடிந்த பின்னரோ லஞ்சம் கேட்பதை சில நில அளவையர்கள் மற்றும் விஏஓக்கள் வழக்கமாக வைத்துள்ளார்கள். அப்படித்தான் திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்க முயன்றதாக கிராம நிர்வாக அலுவலர் உள்பட 2 பேர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர்.
பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் கொடுக்க தேவையில்லை. ஆனால் சிலர் 10 ஆயிரம் வரை லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. தாசில்தார், விஏஓ, கிராம உதவியாளர்,நில அளவையர் என வருவாய் துறையில் உள்ள சில அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டே பணிகளை செய்து கொடுப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

சிலர் பணிகளை முடித்துவிட்டு புரோக்கர்கள் மூலமாக லஞ்சம் கேட்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது . அப்படி லஞ்சம் கேட்பவர்களை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்து கையும் களவுமாக சிக்க வைக்க முடியும். இது லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்களுக்கு சரியான பாடமாக அமையும். திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் சின்ன சானூர் மல்லாவரம் கிராமத்தில் விவசாயம் செய்து வருபவர் சுப்பிரமணி. விவசாயி சுப்பிரமணி தனது நிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய சானூர் மல்லாவரம் கிராம நிர்வாக அலுவலர் புவியரசனிடம் விண்ணப்பித்துள்ளார். அதற்கு ரூ.15 ஆயிரம் கொடுத்தால் பட்டா பெயர் மாற்றம் செய்து தருவதாக கிராம நிர்வாக அலுவலர் புவியரசன், விவசாயி சுப்பிரமணியத்திடம் டிமாண்ட் செய்தாராம்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுப்பிரமணி, இதுபற்றி திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயக்குமாரிடம் புகார் அளித்தார். அவரது ஆலோசனையின் பேரில் சுப்பிரமணி, ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை நேற்று கிராம நிர்வாக அலுவலர் புவியரசன் மற்றும் அவரது உதவியாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் வழங்கினார்கள்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் போலீசார் பாய்ந்து சென்று புவியரசன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில் அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும். அதன் பிறகு அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications