சென்னை, திருச்சி, கோவை.. எல்லா முக்கிய ஊர்களுக்கும் புதிய சாலை திட்டங்கள்! பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில், இதில் சென்னை, திருச்சி உள்ளிட்ட பல ஊர்களில் சாலை மேம்பாடு பணிகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது.
இந்தாண்டு மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் தங்கள் பட்ஜெட்களை தாக்கல் செய்து வருகிறது.

கடந்த வாரம் தான் நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே இந்தாண்டு பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
ஆளுநர் ரவி: இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கடந்த பிப். 12ஆம் தேதி தொடங்கியது. இருப்பினும், அன்றைய தினம் தமிழக அரசு தயார் செய்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என். ரவி வாசிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து அந்த உரையின் தமிழ் வடிவை மட்டும் சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதன் பிறகு ஆளுநர் உரை மீதான விவாதம் நடந்து அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலும் அளித்தார்.
இதற்கிடையே நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாகப் பல முக்கிய ஊர்களில் சாலை மேம்பாடு பணிகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது.
பட்ஜெட்: தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில், "பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டும் சாலை கட்டமைப்பின் தரத்தை மேம்படுத்த அரசு உறுதியாக இருக்கிறது. முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 1262 கிமீ 2587 கோடி மதிப்பில் சாலை அகலப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 4700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சுமார் 2824 கோடி செலவில் 16 புறவழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பருவமழை காலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்படாமல் இருக்க 2006 கோடி ரூபாய் செலவில் 1113 உயர்மட்ட பால பணிகள் எடுக்கப்பட்டு, 683 பாலப்பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. மீதமுள்ள பால பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
சாலை பணிகள்: சிவகாசி நகருக்கு வெளிவட்ட சாலை, மன்னார்குடி நகருக்கு வட்ட சாலை, திண்டுக்கல் நகருக்குப் புறவழிச் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருச்சி- ஸ்ரீரங்கம் இடையே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியும் , அவினாசி முதல் மேட்டுப்பாளையம் வரை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணியும் நடைபெறும். விழுப்புரத்தில் கோரையாறு குறுக்கே பாலம் கட்டும் பணிகள் என இவை அனைத்தும் 665 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்
ஈசிஆர் சாலையில் திருவாண்மையூர் முதல் 16 கிமீ வரை உள்ள பகுதியில் எற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 4 வழி உயர் வழித்தடத்தை அமைக்கும் சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்" என்று அவர் தெரிவித்தார். தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் போக்குவரத்து நெரிசல் மிகப் பெரிய பிரச்சினையாக மாறி இருக்கும் நிலையில், அதைச் சமாளிக்க இந்தத் திட்டங்கள் உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications