சிபிஎஸ்இ பாடத்தில் வர்ணாசிரமம்: 'பிஞ்சுக் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் செயல்'.. மநீம கண்டனம்
சென்னை: சிபிஎஸ்இ 6-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் வர்ணாசிரமம் தொடர்பான பாடம் இடம்பெற்றிருப்பது பிஞ்சுக் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும், உடனடியாக அந்தப் பாடத்தை அகற்ற வேண்டும் என்றும் சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
சிபிஎஸ்இ 6-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் வர்ணாசிரமம் தொடர்பான பாடம் இடம் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
சாதி பேதத்தை அப்பட்டமாக குறிப்பிடும் வகையில் பாடத்தில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளதோடு அதற்கு கீழ் பொருத்துக என்ற கேள்வியுடன் மாணவர்களுக்கு வினாவும் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த 3 மணி நேரங்களில்.. சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை
வலுக்கும் கண்டன குரல்
இது தொடர்பான பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி செல்லும் மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில், பாடப்புத்தகத்தில் வர்ணாசிரமம் குறித்த பாடம் இடம் பெற்றுள்ளது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பல தரப்பிலும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அரசியல் தலைவர்களும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதிர்ச்சி அளிக்கிறது
அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 6-ம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடத்தில், சாதி பேதத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தும் வர்ணாசிரமம் தொடர்பான பாடம் இடம் பெற்றுள்ளது பெரிதும் அதிர்ச்சி அளிக்கிறது.
பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும்
பிஞ்சுக் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் இப்பாடம் அமைந்துள்ளது. பேதமற்ற சமுதாயம் அவசியம் என்று கற்றுக்கொடுக்க வேண்டிய பள்ளியில், மனிதர்களிடம் சாதி பேதங்களை ஏற்படுத்தும் வகையிலான பாடத்தைக் கற்றுத் தருவது கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக அந்தப் பாடத்தை அகற்ற வேண்டும் என்று சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது'' என்று தெரிவித்துள்ளது.
இப்போது எங்கே உள்ளது மனுதருமம்
முன்னதாக நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது ட்விட்டரில் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக திருமாவளவன் கூறுகையில், "பள்ளிப் பிள்ளைகளுக்கு வர்ணாஸ்ரம சமூக அடுக்குகளைக் கற்றுத் தருகிறது ஃபாசிச பாஜக அரசு. இப்போது எங்கே உள்ளது மனுதருமம் அல்லது வர்ணாஸ்ரம தருமம் என்று கேள்வி எழுப்புவோரின் கவனத்திற்காக. இந்துக்களில் நான்கு வகை மட்டுமே. எஸ்சி, எஸ்டி சமூகப் பிரிவினர் இந்நான்கு வகைகளைச் சாராதவர்கள்." என்று கூறியிருந்தார்.
எரிக்கும் போராட்டம் நடைபெறும்
அதேபோல், சி.பி.எஸ்.இயின் 6-ஆம் வகுப்பு பாடத்தில் சனாதனம் ( வர்ண முறைகள்) குறித்த பாடத்தை நீக்க, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையெனில், அதை எரிக்கும் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபடும் எனவும் ரா. முத்தரசன் தெரிவித்து இருந்தார்.