சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை...பாஜகவினரை கல்லால் அடித்து தாக்கி மண்டையை உடைத்த விசிக
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல் முற்றியுள்ளது.
சென்னை: கோயம்பேடு அருகே அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாரதிய ஜனதா கட்சியினருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கற்களால் தாக்கிக்கொண்டதில் சிலரது மண்டை உடைந்தது.
Recommended Video
பாஜகவினருக்கும் விசிக தொண்டர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மதுரையில் தல்லாகுளம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு இன்று காலை முதலே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அங்கு பாஜகவினரும் வந்தனர்.
பாஜகவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என விடுதலை சிறுத்தைகளின் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டு திடீரென பரபரப்பு நிலவியது. சிலர் கொடி கம்பங்களால் போலீசார் முன்பு தாக்கினர். ஒரு பெண் நிர்வாகி பெரிய கல்லை தூக்கிக் கொண்டு ஓட ஓட விரட்டினார் அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவையில் மோதல்
கோவை விமான நிலையத்தில், திருமாவளவன் எம்.பி செய்தியாளர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது, அங்கே தெலங்கானா ஆளுநர் தமிழிசையை வரவேற்க வந்திருந்த பாஜகவினர் பாரத் மாதாகி ஜே கோஷம் போட்டு இடையூறு செய்ய பதிலுக்கு விசிகவினர் ஜெய்பீம் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பேத்கர் 132வது பிறந்தநாள்
இன்று அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்த நாள் நாடு முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பாஜக விசிக மோதல்
இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த பல்வேறு அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்திருந்தன. அதன்படி பாஜக சார்பில் அக்கட்சி தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வந்து மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் மேற்கொண்டிருந்தனர். அதேநேரம் விசிகவின் தலைவர் திருமாவளவன் மரியாதை செய்ய விசிகவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

கல்வீசி தாக்குதல்
இந்த நிலையில் விசிக தலைவர் வருகை காரணமாக ஊன்றப்பட்டிருந்த பாஜகவின் கொடிகளை அகற்றி விசிகவின் கொடியை அக்கட்சியினர் நட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பாஜக-விசிக கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வாக்குவாதம் மோதல், கல்வீச்சு என்ற நிலையை எட்டியது.

பாஜகவினரின் மண்டை உடைப்பு
இந்த மோதலில் பாஜகவின் ஹரிகிருஷ்ணன் என்பவரின் மண்டை உடைந்தது. இதனால் சென்னை கோயம்பேட்டில் பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில் அங்கு போலீசார் அதிகப்படியாகக் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை கோயம்பேடு மட்டுமல்லாது புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட இடங்களிலும் இதேபோல் பாஜக-விசிகவினர் இடையே அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவதில் மோதல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications