குறவன் குறத்தி ஆட்டத்தை போல இனி பறை அடிக்கவும் தடை விதிக்கனும்.. திமுக அரசுக்கு விசிக வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் பறை அடிக்க தடை விதிக்க கோருகிறது விசிக.
சென்னை: தமிழ்நாட்டில் குறவன், குறத்தி ஆட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இதேபோல் ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் பறை அடிப்பதற்கும் தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்துள்ளது திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி.
தமிழ்நாட்டு கோவில் திருவிழாக்களில் குறவன், குறத்தி ஆட்டம் என்பது இடம்பெற்று வந்தது. இந்த குறவன், குறத்தி ஆட்டம் என்பது ஆதிகுடிகளான குறவர் இன மக்களை இழிவுபடுத்தும் வகையில் நடத்தப்பட்டன. இதனால் இந்த ஆட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

தமிழ்நாட்டில் குறவன், குறத்தி ஆட்டங்களுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குறவன் குறத்தி ஆட்டங்களுக்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. இதனடிப்படையில் தமிழ்நாடு அரசும் குறவன், குறத்தி ஆட்டத்துக்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டது.
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தில் உறுப்பினா்களாகப் பதிவு செய்வதற்காக அடையாளம் காணப்பட்ட 100 கலைகள் பட்டியலில் 40-வது இடத்தில் இடம்பெற்றுள்ள குறவன் - குறத்தி ஆட்டம் என்ற கலைப்பிரிவு நீக்கப்படுகிறது. கலை நிகழ்ச்சிகளில் குறவன் - குறத்தி ஆட்டம் என்ற கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. குறவன், குறத்தி ஆட்டம் எந்த ஒரு கலை நிகழ்ச்சியிலும் நடைபெறவில்லை என்பதை கலை பண்பாட்டுத்துறை இயக்குநா் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தம்ழிநாடு அரசின் இந்த அரசாணைக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி, கலை என்ற பெயரில் குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை இழிவுபடுத்தும் 'குறவன் குறத்தி ' நடனத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்ததுபோல பறை அடிப்பதையும் தடை செய்யவேண்டும் என வ்லியுறுத்தி உள்ளார்.

முன்னதாக இதேபோல் தண்டோரா போடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என விசிக வலியுறுத்தியது. இதனை ஏற்று தண்டோரா போடுவதற்கு தம்ழிநாடு அரசு தடை விதித்தது. தண்டோரா போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை. ஒலிப்பெருக்கியை வாகனங்களில் பொருத்தி வலம்வரச் செய்வதன் மூலம் மூலை முடுக்குகளிலெல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட இயலும். எனவே, தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications