வன்முறை நிகழ்த்த சதி.. கொக்கரிக்கும் பாஜகவினரை கைது செய்க.. விசிக ஆர்ப்பாட்டத்தில் திருமா முழக்கம்!
சங் பரிவார் கும்பலை கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சென்னை : பாஜகவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பாஜகவுக்கு எதிராகவும், சனாதன சக்திகளுக்கு எதிராகவும் கண்டன முழங்கங்களை எழுப்பினார்.
விசிக தலைவர் திருமாவளவன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாக காவல்துறை டிஜிபியை சந்தித்து புகார் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு முயலும் சனாதன சக்திகளைக் கண்டித்து சென்னையில் இன்று விசிக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில், இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். அவர் சொல்லச் சொல்ல, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கத்தைத் திருப்பிக் கூறினார்.
குண்டு வீசுவோம், சுட்டுத் தள்ளுவோம்.. மோடி இருக்கிறார் துணிந்து செய்வோம் என்றெல்லாம் கொக்கரிக்கும் சங் பரிவார் கும்பலை, சனாதன கும்பலை கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், பதற்றத்தை உருவாக்க வேண்டுமென சில திட்டமிட்டு செயல்படுகின்றனர். பெரியார் இயக்கங்களைச் சார்ந்தவர்களை திட்டமிட்டு சீண்டுகிறார்கள். பெரியார் சிலை மீது சாயம் பூசி வம்புக்கு இழுக்கிறார்கள். அம்பேத்கரை இந்துத்வாவின் அடையாளமாக காட்டுகிறார்கள் எனப் பேசினார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் தங்கள் கைகளில் பாஜகவுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.












Click it and Unblock the Notifications