அன்று ரஜினிகாந்தை ஓடிப் போக சொன்ன விசிக.. இன்று மீண்டும் அரசியலுக்கு அழைக்கிறதே!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், "அரசியலை துறந்தது போல கமர்ஷியல் சினிமாவையும் கைவிட வேண்டும்" என்று 2 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி அட்வைஸ் செய்திருந்தார். ஆனால் தற்போது, "எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் மனதில் பட்டதைப் பேசும்போது அந்தப் பேச்சுக்கு ஆற்றல் அதிகம். அந்த ஆற்றல் கொண்ட ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வந்திருக்கலாம்" என திடீரென ரவிக்குமார் எம்பி தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளது விவாதப் பொருளாகி இருக்கிறது.
2022-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தமது சமூக வலைதளப் பக்கத்தில் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், ''ரஜினியின் பிறந்தநாளான நேற்று அவரைப்போலவே வேடம் தரித்த ரசிகர்கள் சிலர் அவரைப் பார்ப்பதற்காக அவரது வீட்டின் முன்னே கூடியிருந்த காட்சியை ஊடகங்களில் பார்க்க முடிந்தது. அவர்கள் ரஜினியின் 'காட்சி அரசியல்' காவுகொண்ட பலிகள்.'காட்சி அரசியல்' என்பது தன்னைப் பற்றியே பேசும், தன் புகழையே பாடும், வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அதிகாரத்துவத்தை ஊக்குவிக்கும். மக்களின் விழிப்புணர்வை சிதறடித்து அவர்களை உணர்வற்ற மயக்கநிலையில் வைக்கும். பிம்பங்களே காட்சி அரசியலின் மூலதனக் குவியல். அது குடிமக்களை ரசிகர்களாக்கி முகமற்ற கும்பலாகத் திரட்டும். நாயக வழிபாடு என்னும் பித்தேறிய அந்தக் கும்பல் ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகாரத்துக்கு வழிகோலும். அரசியலைத் துறப்பதென்னும் துணிச்சலான முடிவை எடுத்ததுபோல ரஜினி இன்னொரு முடிவையும் எடுக்கவேண்டும் - கமர்ஷியல் சினிமாவைத் துறக்கும் முடிவுதான் அது. அவருக்கு நல்ல சினிமா எதுவெனத் தெரியும். அதுபோல ஒரு படத்தையாவது அவர் தமிழ்நாட்டு மக்களுக்குக் கொடுக்கவேண்டும். திறமை வாய்ந்த ஒரு கலைஞனாக அவர் தமிழ்நாட்டுக்குச் செய்யும் கைமாறு அதுவாகத்தான் இருக்கும்'', என கடுமையாக விமர்சித்திருந்தார். அப்போது ரஜினிகாந்த் ரசிகர்கள் இதற்கு எதிர்வினையாற்றி இருந்தனர்.

இந்த நிலையில் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் தற்போது தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ''ஜினிகாந்த் என்னும் ஆற்றல் மிக்க பேச்சாளர் ! ' கலைஞர் என்னும் தாய்’ நூல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியது எல்லோரது மனதையும் தொட்டது. அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த பேச்சாளரும்கூட என இன்று அந்த அரங்கிலிருந்த அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் மனதில் பட்டதைப் பேசும்போது அந்தப் பேச்சுக்கு ஆற்றல் அதிகம். அந்த ஆற்றல் கொண்ட ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வந்திருக்கலாம் என இந்த கணத்தில் எனக்குத் தோன்றியது. இன்று பலருக்கும் அப்படித் தோன்றியிருக்கலாம். பாராட்டுகள் சார் !'' இவ்வாறு ரவிக்குமார் பதிவிட்டுள்ளார்.













Click it and Unblock the Notifications