விஜய் பேச்சுக்கு ஆஹோ ஓஹோ வரவேற்பு.. விஜய்யின் 'அந்த' செயலுக்கு செம்ம குட்டு- விசிக டபுள் நிலைப்பாடு!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நடத்திய முதல் மாநாடு தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தால் கூட்டணி கட்சிகளுக்கும் அதிகாரத்தில் பங்கு என அறிவித்திருப்பதை பல அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன. அதே நேரத்தில் வருணாசிரம எதிர்ப்புதான் கொள்கை என அறிவித்துவிட்டு வருணாசிரம தர்மத்தை வலியுறுத்தும் பகவத் கீதைக்கு முக்கியத்துவம் கொடுத்ததும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
2026 சட்டசபை தேர்தலை இலக்கு வைத்து நடிகர் விஜய் களமிறங்கி உள்ளார். விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மதச்சார்பற்ற சமூக நீதிதான் தவெகவின் கொள்கையாக பிரகடனம் செய்யப்பட்டது.

மேலும் பிளவுவாத சக்தியான பாஜகவும் ஊழல்வாதிகளான திமுகவும் தமது சித்தாந்தம் மற்றும் அரசியல் எதிரிகள் எனவும் அறிவித்தார் விஜய். அத்துடன் 2026 சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்பது உறுதி; அப்போது ஆட்சியிலும் அதிகாரத்திலும் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு உண்டு எனவும் அறிவித்தார் விஜய்.
ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு என்கிற நடிகர் விஜய் நிலைப்பாட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்களான பொதுச்செயலாளர் ரவிக்குமார், துணைப் பொதுச்செயலாளர்கள் வன்னி அரசு, ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் வெளிப்படையாக விஜய்யின் இந்த நிலைப்பாட்டை ஆதரித்துள்ளனர்.
அதேநேரத்தில் பகவத் கீதை, அம்பேத்கர், வருணாசிர எதிர்ப்பு ஆகியவற்றை முன்வைத்து விஜய்யை கடுமையாக விமர்சித்தும் வருகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ரவிக்குமார் கூறுகையில், தனது கொள்கை வழிகாட்டிகளில் ஒருவராக புரட்சியாளர் அம்பேத்கரை திரு விஜய் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். மதச்சார்பின்மைதான் தனது கொள்கை என்று அறிவித்திருக்கும் விஜய், இன்று மாநாட்டு மேடையில் இந்து மதத்தின் குறியீடாக பகவத் கீதையையும், இஸ்லாம் மதத்தின் குறியீடாகக் குர்ஆனையும், கிறிஸ்தவ மதத்தின் குறியீடாக பைபிளையும் நினைவுப் பரிசாகப் பெற்றார்.

“ பௌத்தம் இந்த சமூகத்தில் தார்மீக மற்றும் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியது. மௌரியப் பேரரசர் அசோகர் புத்த மதத்தைத் தழுவியபோது, சமூகப் புரட்சி அரசியல் புரட்சியாக மாறியது. மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, பௌத்த மன்னர்களால் பாதிக்கப்பட்ட பிராமணர்கள், புஷ்யமித்ர சுங்கனின் தலைமையில் ஒரு எதிர்ப்புரட்சியைத் தொடங்கினார்கள். அந்த எதிர்ப்புரட்சிதான் பிராமணியத்தை மீட்டெடுத்தது.பகவத் கீதை, இந்த எதிர்ப் புரட்சிக்குக் கருத்தியல் மற்றும் தார்மீக நியாயத்தை வழங்குவதற்காக இயற்றப்பட்டது” என்று தனது நூலில் அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார்.
திரு விஜய் அவர்கள் பகவத் கீதையைப் படிப்பதோடு அதைப்பற்றி டாக்டர் அம்பேத்கர் எழுதியிருப்பதையும் படிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் அம்பேத்கரை சாரமற்ற வெற்றுக் குறியீடாகப் பயன்படுத்துவதில் போய் அது முடிந்துவிடும். பகவத் கீதையைப் பற்றி அம்பேத்கர், 'புரட்சியும் எதிர்ப் புரட்சியும்’ என்ற தனது நூலில் விரிவாக எழுதியிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல விசிகவின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, வருணாசிரமக்கோட்பாட்டை எதிர்ப்பதாக கொள்கை அறிவித்த திரு.விஜய் அவர்கள், பகவத்கீதையை பெற்றுக்கொண்டது முரண்பாடாகும்.
ஏனென்றால், நான்கு வருணங்களை நானே படைத்தேன் என்பது தான்
கீதையின் சாரம். அப்புறம் எப்படி வருணத்தை எதிர்க்க முடியும்? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.













Click it and Unblock the Notifications